நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்ட பணிகள் - ஸ்டாலின் திறந்து வைத்தார்

author img

By

Published : May 12, 2022, 1:08 PM IST

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.518.17 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த திட்டங்கள் என்னென்ன?

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.518.17 கோடி மதிப்பீட்டிலான 21 முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மே 12) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் ரூ.518.17 கோடி மதிப்பீட்டிலான 21 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

இதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகள் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கோட்டூர்புரம், கோட்டூர் கார்டன் 1 வது குறுக்கு தெருவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ரூ.2.23 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உணர்வுப் பூங்கா, வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட நொளம்பூர், சக்தி நகர் பிரதான சாலையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ரூ.1.95 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உணர்வுப் பூங்கா, திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட ஓட்டேரி, குக்ஸ் சாலை சந்திப்பு, கிருஷ்ணதாஸ் சாலையில் ரூ.1.11 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட மாதவரம் ரவுண்டணா அருகில் உள்ள வி.எஸ். மணி நகர் 3 வது தெருவில் (மேற்கு) ரூ.1.03 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா ஆகியவற்றை திறந்து வைத்தார்.

பூங்காக்கள் திறப்பு: மேலும் சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட கிண்டி பொறியாளர்கள் குடியிருப்பு 3 வது குறுக்கு தெரு, காரப்பாக்கம், கண்ணகி நகர் காவல் நிலையம் அருகில் ரூ.1.03 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட நொளம்பூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், முகப்பேர் மேற்கு பிரதான சாலையில் ரூ.75 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட செம்பியம் - செங்குன்றம் சாலை அருகில் செளமியா நகர், பஜனைகோயில் தெருவில் ரூ.90 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா போன்றவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மணலி மண்டலத்திற்குட்பட்ட மணலியில், புழல் ஏரி உபரி நீர் கால்வாயின் குறுக்கே முல்லவாயலில் ரூ.15.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம், மணலி மண்டலத்திற்குட்பட்ட மணலியில், புழல் ஏரி உபரி நீர் கால்வாயின் குறுக்கே பர்மா நகரில் ரூ.14.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய் கரையில், கஸ்தூரிபாய் இரயில் நிலையம் முதல் திருவான்மியூர் இரயில் நிலையம் வரை ரூ.18.71 கோடி செலவில் அடர்வன காடுகள், நடைபாதை, மிதிவண்டி பாதை மற்றும் சுற்றுப்புறத்தை மேம்படுத்தப்பட்ட பணிகளையும் திறந்து வைத்தார்.

குடிநீர் வழங்கல்: சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகள் சென்னை மாவட்டம் – மணலி மண்டலத்திற்குட்பட்ட மாத்தூர் பகுதி மக்களுக்காக ரூ.44.90 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான குடிநீர் வழங்கல் திட்டம், சென்னை மாவட்டம் – பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட ஜல்லடியான்பேட்டை பகுதி மக்களுக்காக ரூ.34.63 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான குடிநீர் வழங்கல் திட்டம், சென்னை மாவட்டம் - மணலி மண்டலத்திற்குட்பட்ட இடையான்சாவடி, சடையான்குப்பம் மற்றும் கடப்பாக்கம் பகுதி மக்களுக்காக ரூ.28.21 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் (CRRT) ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டத்தின் கீழ், கூவம் ஆற்றின் கரையோரம் – சேத்துப்பட்டில் ரூ.3.29 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 இலட்சம் லிட்டர் திறன் கொண்ட தொகுப்பு முறை இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சென்னை, ஆலந்தூர் நிலமங்கை நகரில் ரூ.25.52 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூடுதல் கழிவுநீர் உந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகள் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் - பெருந்துறை மற்றும் 7 பேரூராட்சிகளுடன் கூடிய 547 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.224 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டம் - மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 5 பேரூராட்சிகள் மற்றும் 318 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.85.75 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மேலும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகள் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் நைனாங்குளத்தில் உள்ள உரக்கிடங்கு பகுதியில் ரூ.3.60 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 30 KLD (Kilo Litre Daily) கொள்ளளவு கொண்ட கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், தென்காசி மாவட்டம், தென்காசி நகராட்சி, மத்தளம்பாறை ரோடு உரக்கிடங்கு பகுதியில் ரூ.4.15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 40 KLD கொள்ளளவு கொண்ட கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், திருநெல்வேலி மாவட்டம், விக்ரமசிங்கபுரம் நகராட்சி, காந்திபுரம் பகுதியில் ரூ.4.00 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர் குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மாநகராட்சி, சந்தை பேட்டை தென்னம் பாளையம் பகுதியில் ரூ.2.18 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் சந்தை என மொத்தம் ரூ.518.17 கோடி மதிப்பீட்டிலான 21 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், அடையாறு உப்பங்கழி மற்றும் முகத்துவாரத்தின் 358 ஏக்கரின் தொடர்ச்சியாக திரு.வி.க பாலத்திற்கு கிழக்கே அமைந்துள்ள அடையாறு முகத்துவாரப் பகுதியையும் சீரமைப்பதற்கு 100 கோடி ரூபாய்க்கு அரசால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, முதற்கட்டமாக 58 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ள அடையாறு உப்பங்கழியின் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று ‘தொல்காப்பியப் பூங்கா’ சுற்றுச்சூழல் பூங்காவாக உருவாக்கப்பட்டது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதி: தற்போது, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் உருவாக்கி பராமரிக்கப்பட்டு வரும் ‘தொல்காப்பியப் பூங்காவில்’ 3.20 கிலோமீட்டர் நீளத்திற்கு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கி, அதற்கான அனுமதி அட்டையினை பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநரகம் மற்றும் பேரூராட்சிகளின் ஆணையரகத்தில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான 126 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் காலமான 65 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 6 ஒப்பந்தப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 16.55 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் 5 நபர்களுக்கு நிவாரண நிதி வழங்கினார்.

இதையும் படிங்க: பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்குப் பயத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படவில்லை - அமைச்சர் சேகர்பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.