ETV Bharat / state

'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் - முதலமைச்சருடன் அன்பில் மகேஷ் ஆலோசனை

author img

By

Published : Oct 18, 2021, 1:09 PM IST

1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைப் போக்க, இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டம் இன்று செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

சென்னை: 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைப் போக்க, அவர்களது வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுடன், அன்பில் மகேஷ் இன்று (அக்டோபர் 18) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

இந்த ஆலோசனையில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாகப் பல மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன.

ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு

மேலும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தினாலும் அவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைப் போக்குவதற்கு பட்ஜெட்டிலிருந்து 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இல்லம் தேடி கல்வித் திட்டம்

இதற்கான திட்டம் கொண்டுவர பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துவந்தது. அதன் அடிப்படையில், மாணவர்களின் கற்றல் இடைவெளி, கற்றல் இழப்பை குறைப்பதற்காக தினமும் 1 மணி முதல் 1.30 மணிவரை தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டது.

இந்தத் திட்டம் குறித்து அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டது. 'இல்லம் தேடி கல்வி' திட்டம் இன்றுமுதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஸ்டாலினுடன் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

இந்த ஆலோசனையில், முதலமைச்சரின் ஒப்புதல் பெறப்பட்டு இன்று மாலை திட்டம் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முகக்கவச தொழிற்சாலையில் தீ விபத்து: இருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.