ETV Bharat / state

சென்னை கோயம்பேட்டில் 2 ஐம்பொன் சிலைகள்.. போலீசார் விசாரணை!

author img

By

Published : Nov 19, 2022, 7:10 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூக்கிக்கொண்டிருந்த நபரிடம் இருந்து இரண்டு ஐம்பொன் சிலைகளை மீட்ட போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் இன்று (நவ.19) காலை உறங்கிக் கொண்டிருந்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கோயம்பேடு காவல் நிலைய போலீசார் விசாரித்தபோது ஒருவர் தப்பியோடிவிட்டார்.

மற்றொரு நபரை பிடித்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அதில், ¾ அடி உயரமுள்ள பொன்மணி விளக்கு ஏந்திய சிலை மற்றும் மூன்று அங்குலம் கொண்ட சிறிய பெருமாள் சிலை ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்நபரை கைது செய்த காவல் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் (32) என்பதும், தப்பியோடிய நபர் கும்பகோணத்தைச் சேர்ந்த தினேஷ் (30) என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், திருச்சி லால்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் இருவரிடமும் சிலைகளை கொடுத்து, அதனுடன் பழைய இரண்டு ரூபாய் நோட்டு மற்றும் ஒரு துண்டுச் சீட்டை கொடுத்து, அதனை சென்னையில் உள்ள ஒரு நபரிடம் காட்டினால் சிலைகளை பெற்றுக்கொண்டு 3 லட்சம் ரூபாய் பணம் கொடுப்பார்கள் என கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து சிலைகளை பறிமுதல் செய்த கோயம்பேடு காவல் போலீசார் திருச்சியைச் சேர்ந்த பெண்மணி குறித்தும், சென்னையில் சிலைகளை வாங்கவிருந்த நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய நபரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விசாரணைக்குப் பின் பிடிபட்ட நபரையும், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளையும் கோயம்பேடு காவல் துறையினர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சிலைகள் பழங்கால சிலைகளா என ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெண்ணிடம் 21 சவரன் நகை வழிப்பறி.. ஆரணியில் நடந்த அவலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.