ETV Bharat / state

பழனி தண்டாயுதபாணி சுவாமி சிலையை கடத்த முயற்சி: ராம ரவிக்குமார் புகார்

author img

By

Published : Feb 3, 2023, 3:08 AM IST

பழனி தண்டாயுதபாணி சுவாமி சிலையை கடத்த முயற்சி
பழனி தண்டாயுதபாணி சுவாமி சிலையை கடத்த முயற்சி

பழனி தண்டாயுதபாணி சுவாமி சிலையை கடத்த முயன்றதாக அமைச்சர்கள் சேகர் பாபு, சக்கரபாணி, நீதிபதிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் புகார் அளித்துள்ளார்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி சிலையை கடத்த முயன்றதாக உயர் அதிகாரிகள் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் புகார்

சென்னை: கடந்த மாதம் 26 மற்றும் 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தண்டாயுதபாணி சுவாமி மூலவர் சன்னிதானத்தில் அமைச்சர்கள் சேகர் பாபு, சக்கரபாணி, திண்டுக்கல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி உள்ளிட்ட திமுகவினர் கோயிலின் ஆகம விதிகளுக்கு எதிராக சட்ட விரோதமாக கருவறைக்குள் புகுந்து கதவை மூடியதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாக பரவியது.

இந்த சம்பவம் குறித்து இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் மூலவர் சிலை ஆய்வுக் குழுவினருடைய அறிக்கைகள் பொதுமக்களுக்கு எதுவும் தெரிவிக்காத நிலையில், சுவாமி திருமேனியின் உறுதித் தன்மை பலப்படுத்தாமல் கடந்த 26ஆம் தேதி ஏழாம் கால பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் கோயில் கருவறைக்குள் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, நீதியரசர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கருவறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டனர்.

யாக சாலையில் உள்ள சிலைக்கு பொதுமக்களை பார்வையிட அனுமதி அளித்துவிட்டு மூலவர் சிலை உள்ள கருவறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு நீண்ட நேரமாக வெளியே வரவில்லை, இதனால் அங்கு இருந்த சில பக்தர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மற்ற கோயில்களில் உள்ள சாமி திருமேனிகள் கல்லால் ஆனது, பழனி திருக்கோயில் கருவறையில் உள்ள மூலவர் போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண திருமேனி. எனவே நவபாஷாண சிலையை உள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டு சேதப்படுத்தி இருக்கலாம் என ஐயப்பாடு எழுகிறது. மேலும் அந்த சிலையை கடத்துவதற்காகவும் உள்ளே சென்றவர்கள் திட்டம் தீட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சிறப்புக் குழுவை அமைத்து திருக்கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக, கருவறைக்குள் சென்ற நபர்கள் யார் யார் என விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: ஓபிஆரின் சாதனைகள் கல்விசாலை பாடங்களில் இடம்பெற வேண்டும்: ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.