ETV Bharat / state

"அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கை" - அமைச்சர் பொன்முடி தகவல்!

author img

By

Published : Jun 22, 2023, 3:13 PM IST

Higher
கலை

தமிழ்நாட்டில் கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் அதிகமாக வந்துள்ளதால், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 20 சதவீதம் வரை மாணவர் சேர்க்கையை அதிகரித்துக் கொள்ளலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(ஜூன் 22) உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் காரணமாக உயர்கல்வித் துறை வளர்ச்சி பெற்று வருகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு 2,46,295 மாணவ மாணவியரிடம் விண்ணப்பம் பெறப்பட்டது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான இடங்கள் 1,07,299. இதுவரை 80,804 இடங்கள் நிரப்ப பட்டுள்ளன. 27,215 காலியிடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான தேதி வரும் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் விண்ணப்பங்கள் அதிகமாக வந்துள்ளதால், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள், அரசு கல்லூரிகளில் 20 சதவீதமும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதம் கூடுதலாக உயர்த்தப்பட இருக்கிறது.

தமிழக ஆளுநர் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பேசினாலும், மாநில கல்விக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது, 2 மாதத்தில் அறிவிப்பு வெளியாகும். அடுத்த மாதம் 3ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. திறந்த பின்னரும் கல்லூரிகளில் காலியிடங்கள் இருப்பின், 3, 4, 5, 6 ஆகிய தேதிகளில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

சமுகநீதியை பின்பற்றி, அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் BC, MBC SC, ST என்ற பிரிவுகள் வாரியான ஒதுக்கீடுகளுக்கு ஏற்ப கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஒரு கல்லூரியில் சேர்ந்த மாணவர் தனக்கு விருப்பமான கல்லூரியில் இடம் கிடைத்தால், ஏற்கனவே பணம் செலுத்திய கல்லூரியில் இருந்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்" என்று கூறினார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 2023 - 2024ஆம் கல்வி ஆண்டில் 5,699 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கு 11 மாதத்திற்கு மாதம் 20 ஆயிரம் வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசு கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர் கல்வித்துறை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.