ETV Bharat / state

"கோடை காலங்களில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

author img

By

Published : Apr 11, 2023, 10:26 PM IST

Updated : Apr 12, 2023, 8:16 PM IST

ரசாயனம் கலந்து பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பழங்களில் ரசாயனம் கலந்திருந்தால் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

health
கோடை

"கோடை காலங்களில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்"

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கோடை கால வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தற்பொழுது கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்க

வருகின்ற நாட்களில் உயர் வெப்ப தாக்கத்தின் காரணமாக தீவிர தலைவலி, மயக்கம், படபடப்பு, தசைப்பிடிப்பு, வலிப்பு, சுயநினைவு இழத்தல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொது மக்கள் உயர் வெப்பநிலையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உடலின் வெப்பம் தணியும் அளவிற்கு குடிநீரை அடிக்கடி பருக வேண்டும்.

அடிக்கடி தண்ணீர் குடித்து நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், வெளியிடங்களுக்கு செல்லும்போது பாட்டிலில் தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும், ORS கரைசலை பருகலாம். எலுமிச்சை, தர்பூசணி, கிர்ணி பழச்சாறுகள், மோர், லஸ்ஸி போன்றவற்றை பருக வேண்டும்.

நீர்ச்சத்து அதிகம் உள்ள திராட்சை, வெள்ளரி காய்களை எடுத்துக் கொள்ளவும். பருத்தியால் ஆன வெளிர் நிறம் கொண்ட மெல்லிய ஆடைகளை தளர்வாக அணிய வேண்டும். வெயிலில் செல்லும்போது காலணிகளை அணிந்து செல்ல வேண்டும். வேலை இல்லாத நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், திறந்த வெளியில் வேலை பார்ப்பவர்கள், இதய நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் வெப்ப அலைகளின் தாக்கத்தால் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உயர் வெப்பநிலையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

மதுப்பிரியர்கள் வெயில் காலங்களில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். டீ, காபி, கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள், சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்களை தவிர்க்கவும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். அதிக புரதச்சத்து உள்ள உணவுகள் மற்றும் பழைய உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். உடல் வெப்பநிலை அதிகரிப்புடன் மயக்கம், குழப்பம் அல்லது வியர்வையற்று தோல் உலர்தல் போன்றவற்றில் ஏதாவது ஒரு அறிகுறியுடன் யாரையாவது கண்டால் உடனடியாக 108 அல்லது 104 என்ற அவசர உதவி எண்ணை அழைக்க வேண்டும்.

ரசாயனங்கள் மூலம் பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை

பழங்களில் அதிகப்படியான ரசாயனங்களை போட்டு பழுக்க வைக்கின்ற பழக்கங்களும் உள்ளது. இது தொடர்பாக உணவுத்துறைக்கு அறிவுறுத்தி உள்ளோம். மாம்பழத்தில் ரசாயன கற்களை போட்டு பழுக்க வைப்பார்கள், தர்பூசணி பழங்கள் கூட ஊசிப்போட்டு பழுக்க வைக்கப்படுகிறது. குறுகிய மனநிலை கொண்ட வணிகர்கள் சிலர் உடனடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில், இது போன்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தர்பூசணிப் பழத்தை சிவப்பாக மாற்றுவதற்கு போடப்படும் ஊசியினால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கோடை காலத்தில் மட்டுமல்லாமல் எப்போதும் இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது.

உணவு பாதுகாப்புத்துறையில் புகார் தெரிவித்திடுக

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இதுபோன்று ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்து, இது போன்று தவறுகள் தெரிகிறதோ அந்த இடத்திற்கு சென்று கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் தெரிவிக்க 9444042322 எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் புகார் செய்தால் உனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் செய்பவர்களின் பெயர் ரகசியமாக பாதுகாக்கப்படும். பழங்களில் ரசாயனங்கள் தென்பட்டாலோ, ரசாயனங்கள் கலந்து பழங்கள் பழுக்க வைப்பதாக சந்தேகம் ஏற்பட்டாலோ பொதுமக்கள் இந்த வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

ரசாயனம் கலந்து பழங்களை பழுக்க வைத்து விற்றால், கடையை மூடுதல், கைது, லைசன்ஸ் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோடைகாலத்தில் காலவதியான பொருட்களை விற்பனை செய்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சாதாரணமாக விற்கப்படும் சோடா, கலர் போன்ற குளிர்பானங்களையும் ஆய்வுச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், "கோடை காலத்தில் மது குடிப்பதால் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அந்த தவறை செய்யாதீர்கள். தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு போதிய அளவுக்கு இருக்கிறது. எனவே ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். ஒஆர்எஸ் பவுடர் எல்லா மருத்துவமனையிலும் கிடைக்கும், அவ்வாறு கிடைக்கவில்லை என்றால் பொதுமக்கள் 104 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஐபிஎல் மேட்ச்க்கு பாஸ் கேட்ட எஸ்.பி.வேலுமணி.. அமைச்சர் உதயநிதி கூறிய பதில் என்ன?

Last Updated : Apr 12, 2023, 8:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.