ETV Bharat / state

ஐபிஎல் மேட்ச்க்கு பாஸ் கேட்ட எஸ்.பி.வேலுமணி.. அமைச்சர் உதயநிதி கூறிய பதில் என்ன?

author img

By

Published : Apr 11, 2023, 7:15 PM IST

ஐபிஎல் போட்டியைக் காண சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கேள்விக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

ஐபிஎல் பாஸ் கேட்ட எஸ்.பி.வேலுமணி.. அமித் ஷாவை சுட்டிக்காட்டிய அமைச்சர் உதயநிதி!
ஐபிஎல் பாஸ் கேட்ட எஸ்.பி.வேலுமணி.. அமித் ஷாவை சுட்டிக்காட்டிய அமைச்சர் உதயநிதி!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஏப்ரல் 11) நடைபெற்றது. இதன் பதிலுரையின்போது பேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில்தான். அதன் பின்னர், என் தந்தை ஸ்டாலின் மேயரான பிறகு, வேளச்சேரிக்கு குடி பெயர்ந்தோம்.

கோபாலபுரத்தில் இருக்கும்போது, சின்ன வயதில் நானும், அன்பில் மகேஸும் சாலையில் கிரிக்கெட் விளையாடுவோம். கருணாநிதி உடனே கிரிக்கெட் விளையாடி உள்ளேன். அவர் எங்களுக்கு பந்தை போடுவார். பேட்டிங் ஆடி விட்டு அவர் சென்று விடுவார். கருணாநிதியோடு மட்டுமல்ல, நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் உடனும் கிரிக்கெட் விளையாடி உள்ளேன். இன்னும் சொல்லப் போனால், முதலமைச்சர் மிகச்சிறந்த லெக் ஸ்பின்னர். அவர் பந்து வீசினால், யாராலும் ஆட முடியாது.

இங்கே எப்படி சிக்சர் அடிக்கிறாரோ, அதே போலத்தான் பந்து வீச்சிலும். எனக்கு இந்த விளையாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கொடுத்து இன்று பதிலுரை அளிக்க வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார். இதனையடுத்து ஐபிஎல் போட்டிக்கு பாஸ்கள் வழங்க வேண்டும் வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி பேசியதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “4 வருடங்களாக அங்கு போட்டிகள் நடக்கவில்லை. யாருக்கு டிக்கெட் வாங்கி கொடுத்துள்ளீர்கள் என்று தெரியவில்லை.

என்னுடைய சொந்த செலவில், ஒவ்வொரு போட்டிக்கும் என்னுடைய தொகுதியில் இருந்து 150 கிரிக்கெட் வீரர்களை டிக்கெட் வாங்கி, அவர்களை கூட்டிச் சென்று பார்க்க வைக்கிறேன். ஐபிஎல் நடத்துவது, உங்களுடைய நெருங்கிய நண்பர் அமித்ஷா உடைய மகன் ஜெய்ஷாதான். அவர்தான் பிசிசிஐ மூலமாக ஐபிஎல் போட்டியை நடத்துகிறார். நாங்கள் சொன்னால் கேட்க மாட்டார். நீங்கள் சொன்னால் அவர் கேட்பார்.

நீங்கள் அவரிடம் சொல்லி, அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 5 டிக்கெட் கொடுத்தால் கூட போதும். நாங்கள் காசு கொடுத்து கூட வாங்கிக் கொள்கிறோம்” என தெரிவித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏழுந்தது. மேலும் பேரவைக் கூட்டத்தில் பதிலுரை ஆற்றிய அமைச்சர் உதயநிதி, தனது பேச்சின் நிறைவில் அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் இன்று, தனது மகள் தன்மயாவிற்கும் பிறந்தநாள் என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, “அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தன்மயா இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என கூறினார். அதேநேரம் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த தன்மயாவிற்கு வணக்கம் கூறி, தங்களது வாழ்த்தினைத் தெரிவித்தனர்.

முன்னதாக அமைச்சர் உதயநிதி மானியக் கோரிக்கையில் உரையாற்றுவதைப் பார்ப்பதற்காக அவரது மனைவி கிருத்திகா உதயநிதி, தாயார் துர்கா ஸ்டாலின், மகள் தன்மயா மற்றும் சபரீசன் ஆகியோர் பேரவை மாடத்திற்கு வந்தனர். அப்போது அமைச்சர்கள் செந்தில் பாலாஜி , பொன்முடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் மாடத்தை நோக்கி வணக்கம் கூறி, உதயநிதி குடும்பத்தினருக்கு வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழர்கள் இல்லாத சிஎஸ்கே அணியை தடை செய்க - சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.