சொத்து குவிப்பு: பெண் காவலர் பணியிடை நீக்கம்!

author img

By

Published : Nov 24, 2022, 9:16 PM IST

குற்றவாளியுடன் இணைந்து சொத்து குவிப்பு: பெண் காவலர் பணியிடை நீக்கம்

மோசடி வழக்கு தொடர்புடையவருடன் தொடர்பில் இருந்து சொத்துக்களை குவித்ததாக துறைமுகம் காவல் நிலைய பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பி.எம் ரெட்டி (எ) லைன் முத்துவேல் மீது பல்வேறு மோசடி வழக்குகள் மத்திய குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ளது.

குறிப்பாக மதுரையைச் சேர்ந்த தனியார் கல்லூரி நிர்வாகி முகமது ஜலீல் என்பவரிடம் முத்துவேல் தன்னை பெரிய ஃபைனான்சியர் போல் காட்டிக்கொண்டு கல்லூரி விரிவாக்கப் பணிகளுக்காக 200 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, கமிஷனாக 5.46 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.

மேலும் மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இறுதியாக முத்துவேலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ச்சியாக மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்ததாக சமீபத்தில் முத்துவேல் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மோசடி செய்த பணத்தில் முத்துவேல் சேர்த்த சொத்துக்களை முடக்கம் செய்யும் பணிகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வந்த போது, துறைமுகம் காவல் நிலைய பெண் காவலர் அஜ்மோல் பெயரில் ஒரு சொத்துக்கள் எழுதி இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. முத்துவேல் மத்திய குற்றப்பிரிவில் வழக்கு விசாரணைக்காக ஆஜராகிய போது, மத்திய குற்றப்பிரிவில் காவலராக பணியாற்றி வந்த அஜ்மோல் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் விவாகரத்தான பெண் காவலர் அஜ்மோலுக்கும் முத்துவேலுக்கும் நெருக்கம் ஏற்பட்டு, இருவரும் வில்லிவாக்கத்தில் ஒன்றாக வசித்து வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக அஜ்மோல் பெயரில் மோசடி செய்த பணத்தில் முத்துவேல் ஒரு வீடு எழுதி கொடுத்திருப்பதும் விசாரணையில் அம்பலமானது.

இந்நிலையில் ஒழுங்கு நடவடிக்கையாக தற்போது துறைமுகம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் அஜ்மோல் பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்தகட்டமாக காவலர் அஜ்மோலுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி மோசடி செய்து சம்பாதித்த பணத்தில் என்னென்ன சொத்துக்கள் எங்கெல்லாம் வாங்கி குவிக்கப்பட்டுள்ளது, என்பது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போலி ஆவணம் மூலம் ரூ.87 லட்சம் மோசடி.. அம்பலமானது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.