சென்னையில் வசித்துவரும் மொத்த வர்த்தகர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், "கிரீம்ஸ் சாலையில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் வணிகவரித் துறை அலுவலராகப் பணியாற்றிவரும் செல்வகுமார் என்பவர் என்னை அணுகி, 'உங்களது கம்பெனி 75 லட்ச ரூபாய் ஜிஎஸ்டி வருமானவரி செலுத்தத் தவறியுள்ளது' எனக் கூறினார்.
ஏற்கனவே மூடிய நிறுவனத்திற்கு எதற்கு ஜிஎஸ்டி வரி என்று கேட்டதற்கு, 'நடவடிக்கை எடுக்காமல் இருக்க 20 லட்சம் ரூபாய் கையூட்டாக அளிக்க வேண்டும்' என இடைத்தரகர் கோபாலகிருஷ்ணன் என்பவர் கூறினார். அதுமட்டுல்லாது முன் தொகையாக ஐந்து லட்சம் ரூபாயை செல்வகுமார் கேட்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் ரசாயனம் தடவிய ஐந்து லட்சம் ரூபாயை அந்த வர்த்தகரிடம் கொடுத்தனர். இதை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வணிகவரித் துறை அலுவலரை வரவைத்து கையூட்டாகக் கொடுக்குமாறு காவலர்கள் கூறினர்.
அதேபோல் அந்த வர்த்தகரும் வணிகவரித் துறை அலுவலர் செல்வகுமாரிடம் அந்தப் பணத்தைக் கொடுக்க மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக அவரை கைதுசெய்தனர்.