ETV Bharat / state

செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம்? - ஆளுநரின் மறுப்புக்கு அமைச்சர் பொன்முடி பதில்!

author img

By

Published : Jun 16, 2023, 7:57 AM IST

ஆர்.என்.ரவி & பொன்முடி
RN Ravi & Ponmudi

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் நடவடிக்கையை ஆளுநர் தொடர்ந்து மேற்கொள்வது கண்டனத்திற்குரியது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த துறைகள் இருவேறு அமைச்சர்களுக்கு பிரித்து அளிக்க தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், அந்தப் பரிந்துரையை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அதிலும், "அமைச்சருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருப்பதால் மருத்துவக் காரணங்களுக்காக இலாகாவை மாற்றுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், அவரை அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. அதை நீங்கள் குறிப்பிடாததால் உங்கள் பரிந்துரையை ஏற்க முடியாது" என ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழக்கறிஞர் ஆர்.என்.இளங்கோவுடன் நேற்று (ஜூன் 15) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, “அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என ஆளுநர் கடந்த மே 31 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்ற அடுத்த நாளே முதலமைச்சர் ஜூன் 1 அன்று ஆளுநருக்கு இது குறித்த தெளிவான சட்ட ரீதியான காரணங்களை விளக்கிக் கூறி பதில் கடிதம் அனுப்பி வைத்திருந்தார். அந்த கடிதத்தில், ஆளுநரின் கடிதம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பதை சுட்டிக் காட்டியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்குத்தான் அமைச்சரை நீக்கவோ, நியமிக்கவோ பரிந்துரை செய்யும் அதிகாரம் இருக்கிறது என்பதையும் அதில் கூறி இருந்தார்.

அது மட்டுமல்லாமல், இது குறித்து பரிந்துரைகளை அளிக்கும் ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின்படி எவ்வித அதிகாரமும் இல்லை என்பதையும் தெளிவாக அரசியல் சட்டப்பிரிவு 164 (1)ஐ மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார். மேலும், அக்கடிதத்தில் ஒரு மாநில அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்பதை முதலமைச்சர் ஆளுநருக்கு அடிப்படை அரசியல் பாடமே எடுத்திருக்கிறார்.

இன்னும் சொல்வதென்றால், தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தபோது, வழக்குகள் விசாரணையிலிருந்த நிலையில் எப்படி பதவியில் தொடர்ந்தார்கள் என்பதைக் கூட உதாரணமாக சுட்டிக் காட்டியிருந்தார்.

அந்தக் கடிதத்திலேயே அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில் கடிதம் எழுதும் ஆளுநர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு தொடர கோரப்பட்ட அனுமதியை அளிக்காமல் ஏன் கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு எல்லாம் எந்த பதிலையும் கூற ஆளுநருக்கு திராணி இல்லை போலும்.

அதை ஏனோ மறந்துவிட்டு, முதலமைச்சர் அனுப்பிய 1.6.2023 என்ற நாளிட்ட பதில் கடிதத்தினை வசதியாக மறைத்துவிட்டு, தான் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தை மட்டும் லீக் செய்திருப்பது அற்பத்தனமான அரசியல் என்றே கருத வேண்டியதிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அரசுப் பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த பொறுப்புகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துச்சாமிக்கு மாற்றி வழங்கப் பரிந்துரைத்து முதலமைச்சர் இன்று மதியம் கடிதம் எழுதியிருந்தார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற வகையில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து விசாரித்து வருவதை சுட்டிக்காட்டி, சரியான காரணத்தை மேற்கோள் காட்டி கடிதம் அனுப்புமாறு ஆளுநர் கேட்டிருக்கிறார்.

இது மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாகவும், அரசியல் சட்டத்திற்கு புறம்பானதாகவும் நாங்கள் பார்க்கிறோம்.
எப்படி அமைச்சர்களை நியமிப்பதிலும், நீக்குவதிலும் முதலமைச்சரின் பரிந்துரைப்படி ஆளுநர் செயல்பட வேண்டுமோ, அதேபோல்தான் இலாகா மாற்றுவதிலும் செயல்பட வேண்டும்.

ஒரு அமைச்சரின் இலாகாவை ஏன் முதலமைச்சர் மாற்றுகிறார் என்று காரணம் கேட்க ஆளுநருக்கு அதிகாரமும் இல்லை. அரசியல் சட்டப்படி உரிமையும் இல்லை. மேலும், அமைச்சர் ஒருவர் விசாரணையை சந்திப்பது அவரது அமைச்சர் பொறுப்புக்கான தகுதியை எந்த வகையிலும் பாதிக்காது என்ற நிலையில், அதனை ஆளுநர் சுட்டிக்காட்டி இருப்பது தேவையற்றது.

இவற்றை கருத்தில் கொண்டு, ஆளுநரின் கடிதத்திற்கு உடனடியாக இன்று பதில் அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் அவரின் முந்தைய கடிதத்திற்கு பதில் அளிக்கப்பட்ட விவரத்தையும், இன்றைய கடிதத்திற்கு தெளிவான சட்ட விவரங்களையும் எடுத்துக் கூறி, தான் ஏற்கனவே அளித்த பரிந்துரையை ஏற்று அதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசியல் சட்டப்படி பதவிப் பிரமாணம் செய்து கொண்டு, அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டிய ஆளுநர், இப்படி அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாக இல்லாமல் இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் நடவடிக்கையை ஆளுநர் தொடர்ந்து மேற்கொள்வது வேதனைக்குரியது மற்றும் கண்டனத்திற்குரியது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி உயிருக்கு எதேனும் ஏற்பட்டால் அமலாக்கத்துறையே பொறுப்பு - சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.