ETV Bharat / state

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக துவங்க உள்ள கோத்ரேஜ் நிறுவன உற்பத்தி ஆலை..!

author img

By

Published : Aug 10, 2023, 3:58 PM IST

Etv Bharat
Etv Bharat

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக துவங்க உள்ள கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவன உற்பத்தி ஆலையில் 50% பெண்களுக்கும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 515 கோடி ரூபாய் முதலீட்டில் 446 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசு மற்றும் கோத்ரேஜ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

உலகளவில் பல்வேறு வணிகங்களை மேற்கொண்டுவரும் கோத்ரேஜ் குழுமம், சுமார் 120 கோடி நுகர்வோர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் நிகர வருமானம், ரூ.7,667 கோடி ஆகும். இந்நிகர வருமானம், சுமார் 85 நாடுகளில் இருந்து ஈட்டப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம், இந்தியாவில் 33 இடங்களில் தனது உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலை நகரில் ஒரு உற்பத்தி மையத்தினை நிறுவியுள்ள இந்நிறுவனம், ஒரு புதிய அதிநவீன உற்பத்தி ஆலையை நிறுவ திட்டமிட்டு உள்ளது.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில், 515 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 446 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சோப்புகள், முக அழகு க்ரீம்கள், தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் மற்றும் கொசு ஒழிப்பான் போன்றவற்றிற்கு ஒரு உற்பத்தி மையத்தை நிறுவ உள்ளது.

இந்த திட்டத்தில், 50 சதவிகிதம் அளவிற்கு பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும். மேலும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது புத்தாக்கம் மற்றும் நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் நிறுவப்பட உள்ளதாக கோத்ரேஜ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இத்திட்டத்தை நிறுவுவதற்கு, தமிழ்நாடு அரசிற்கும், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஆகஸ்ட் 10) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் நிசாபா கோத்ரேஜ், மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் சுதிர் சீதாபதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும்" - ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.