ETV Bharat / state

கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு; எடப்பாடி பழனிசாமி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 4:59 PM IST

Georgetown court orders Edappadi Palaniswami to appear in KC Palanisamy filed defamation case
எடப்பாடி பழனிசாமி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Defamation Case On Edappadi Palaniswami: முன்னாள் அதிமுக எம்.பி., கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 23ஆம் தேதி நேரில் ஆஜராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: அதிமுக கட்சியின் உறுப்பினர் அட்டைகளைப் போலியாக வழங்கி சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் தன்னை பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் தனக்கும், தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் வழக்கைத் தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மறு ஆய்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை ஜார்ஜ் டவுன் நடுவர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தொடர்ந்து நடத்த வேண்டுமென உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜனவரி 23ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

இதையும் படிங்க: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு.. எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.