ETV Bharat / state

'அதிமுகவை விமர்சித்தால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும்' - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!

author img

By

Published : Aug 4, 2023, 4:43 PM IST

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவினரை விமர்சனம் செய்தால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், ஒழுங்கு நடவடிக்கையால் கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா இன்று (ஆக.04) மீண்டும் அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து இக்கூட்டத்தில் மதுரை மாநாட்டிற்கான பணிகளின் நிலை, நாடாளுமன்றத் தேர்தலில் பணிகள் எந்நிலையில் இருக்கிறது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும், அதிமுகவின் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல், நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பங்கீடு உள்ளிட்டப் பல்வேறு முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மதுரை மாநாடு சிறப்பாக நடைபெற மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரை மாநாட்டிற்காக பத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில், ஒவ்வொரு குழுவுடனும் தனித்தனியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இன்னும் மாநாட்டிற்கு 15 நாள்களே இருக்கும் நிலையில் பணிகளை விரைவுபடுத்த மாவட்டச் செயலாளர்களை அறிவுறுத்தியுள்ளார்.

ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "மதுரை மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை செய்தோம். மதுரையைச் சுற்றியுள்ள 11 மாவட்டச் செயலாளர்களுக்கு சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மாநாட்டு ஏற்பாட்டிற்கான கூட்டமே ஒரு சிறிய மாநாடு போன்று இருந்தது.

மொத்தம் 15 லட்சம் பேர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார்கள். மாநாட்டிற்கு வருவோருக்கு உணவு, தங்குமிடம், வாகன நிறுத்தம் போன்ற வசதிகள் செய்வது குறித்தும் ஆலோசனை செய்தோம்.

ராகுல் காந்தியின் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அதிமுகவில் இருக்கக்கூடிய ஒரு அடிமட்ட தொண்டனை விமர்சனம் செய்தால் கூட அதற்குப் பதிலடி கொடுக்காமல் இருந்தது இல்லை. அதிமுகவை தொட்டால் கெட்டான் என அண்ணாமலைக்கே தெரியும்.

அதிமுக தொண்டரை விமர்சனம் செய்தால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்ற சூழ்நிலை ஏற்படும். இந்த நிலையினை அண்ணாமலை ஏற்படுத்தமாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை காப்பாற்றினால் நிச்சயமாக அண்ணாமலைக்கு நல்லது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: தமிழகத்திற்கான உரிய காவிரி நீரை வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.