ETV Bharat / state

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருவதற்கு எந்த உரிமையும் கிடையாது - ஜெயக்குமார்

author img

By

Published : Jul 5, 2022, 5:57 PM IST

டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் தினகரன், சசிகலா வண்டி எடுத்து சுற்றுவது நியாயமா? - ஜெயக்குமார் கேள்வி!
டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் தினகரன், சசிகலா வண்டி எடுத்து சுற்றுவது நியாயமா? - ஜெயக்குமார் கேள்வி!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருவதற்கு எந்த உரிமையும் கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்குழுவிற்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “வருகிற ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ளது. அதனால் காவல்துறையினரின் பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் மனு அளித்துள்ளோம். கடந்த 23 ஆம் தேதி அன்று நடந்த பொதுக்குழுவிற்கு, காவல்துறை உரிய பாதுகாப்பை அளிக்க தவறி விட்டது.

டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் தினகரன், சசிகலா வண்டி எடுத்து சுற்றுவது நியாயமா? - ஜெயக்குமார் கேள்வி!

11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவில், 2,665 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் உள்பட 65 எம்எல்ஏக்கள், 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இந்த பொதுக்குழு சட்ட ரீதியாக நடைபெற உள்ளது. எனவே காவல்துறை முழுமையாக பாதுகாப்பு வழங்க வேண்டும்.

சமூக விரோதிகள் பொதுக்குழு நடத்த விடாமல் தடுக்க வாய்ப்பு இருப்பது குறித்தும் டிஜிபியிடம் எடுத்துச் சொல்லி உள்ளோம். பொதுக்குழுவிற்கு வெளியே சமூக விரோதிகள் வரலாம். அவர்களை வராமல் தடுக்க வேண்டும். இதற்காக எதிர்தரப்பினர்தான் திட்டமிட்டு வருகின்றனர்.

மேலும் நேரில் பொதுக்குழு நடத்த இயலாவிட்டால், ஆன்லைன் மூலம் நடத்த வாய்ப்பு இருக்கிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டியது, காவல்துறையினரின் கடமை. அதனை காவல்துறை சரியாகச் செய்ய வேண்டும். கரோனா தொற்று பரவல் காரணமாக விதிமுறைகளை பின்பற்றுவோம். பொதுக்குழு அறிவிப்பு வெளியாகிவிட்டது. அனைவருக்கும் அழைப்பு கொடுத்துள்ளோம்.

எவ்வாறு காலநிர்ணயம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ, அதன்படி தான் பொதுக்குழு நடந்து வருகிறது. தினகரன் ஒரு வண்டி எடுத்துச் சென்று விட்டார்; சசிகலா ஒரு வண்டி எடுத்துச் சென்று விட்டார். டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் வண்டியை எடுத்துச் சுற்றுவது நியாயமா? அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருவதற்கு எந்த உரிமையும் கிடையாது.

2017 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட பிறகு, அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தொண்டனுக்கும் தலைமைக்கும் ஒரே சட்டம் தான். கட்சி விதியை யார் மீறினாலும் தவறு. கட்சி விரோத நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் தவறு. கட்சி தன் கடமையை செய்யும். அமமுகவையும் சசிகலாவையும் பிரிக்க முடியாது. அவர்கள் நகமும் சதையும் போன்றவர்கள்" என கூறினார்.

இதையும் படிங்க: பொதுக் குழுவுக்கு தடையா?: ஓபிஎஸ் மனு நாளை விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.