ETV Bharat / state

உள்ளாட்சி தேர்தல் பரப்புரை ஓய்ந்தது!

author img

By

Published : Oct 4, 2021, 7:08 PM IST

உள்ளாட்சி தேர்தல் பரப்புரை ஓய்ந்தது!
உள்ளாட்சி தேர்தல் பரப்புரை ஓய்ந்தது!

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் பரப்புரை நிறைவு பெற்றது.

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு அக்டோபர் 6, 9 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் இடங்களில் பரப்புரை இன்று (அக்.4) மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. தேர்தலுக்கு தொடர்பு இல்லாத நபர்கள் ஊராட்சிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். முதற்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அக்.6 ஆம் தேதி வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களில் 3 ஆயிரத்து 346 வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அக்.6 தேர்தல்

முதல் கட்ட வாக்குப்பதிவில் 78 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 12 ஆயிரத்து 652 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

நான்கு விதமான வாக்குச்சீட்டுகள்
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

வாக்காளர்கள்

நடப்பு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள அடிப்படை விவரங்களைக் கொண்டு ஆன்லைன் முறையில் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 37 லட்சத்து 77 ஆயிரத்து 524 ஆண் வாக்காளர்களும், 38 லட்சத்து 81 ஆயிரத்து 361 பெண் வாக்காளர்களும், 835 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 76 லட்சத்து 59 ஆயிரத்து 720 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

முதல் கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்களும், இரண்டாம் கட்ட தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர்.

171 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் 3 ஆயிரத்து 777 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனர்.

41,000 வாக்குப்பெட்டிகள்

ஒன்பது மாவட்டங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு 7 ஆயிரத்து 921 வாக்குச் சாவடிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 6 ஆயிரத்து 652 வாக்குச்சாவடிகளிலும் என மொத்தம் 14 ஆயிரத்து 573 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சுமார் 41 ஆயிரத்து 500 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

வாக்கு சாவடி மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் 40 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும், கரோனா நோயாளிகள் மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் பதிவான வாக்குகள் அக்டோபர் 12 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

இதையும் படிங்க: பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை - சிறப்பு டிஜிபி, எஸ்பி மனு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.