சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைத்திருந்த 60 சவரன் நகைகள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் மகளும், நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (41) சென்னை போயஸ்கார்டன் ராகவீரா அவென்யூ சாலையில் வசித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராக இயங்கி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3, வை ராஜா வை, சினிமா வீரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது லால் சலாம் திரைப்படப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் நகைகள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில், "எனது தங்கை திருமணத்திற்கு பிறகு 2019-ஆம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. செண்ட் மேரிஸ் சாலையில் உள்ள வீடு, நடிகர் தனுஷ் சிஐடி நகர் வீடு மற்றும் போயஸ் கார்டன் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் அந்த லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 10ஆம் தேதி லாக்கரில் இருந்த நகைகளை எடுக்க சென்ற போது, அதில் இருந்த வைர நகைகள், தங்க நகைகள், நவரத்தின கல் என சுமார் 60 சவரன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தான் லாக்கரில் தங்க நகைகள் வைத்திருப்பது வீட்டில் பணிபுரியும் பெண்கள் மற்றும் தனது கார் ஓட்டுனருக்கு மட்டுமே தெரியும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். 18 வருடங்களாக வைத்திருந்த தனது நகைகளை உடனடியாக மீட்டு தரக்கோரி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த அளித்துள்ள இந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணிபுரியும் பெண்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தும் வருகின்றனர்.
இதையும் படிங்க: கரூரில் அடுத்தடுத்து கொள்ளை.. 105 பவுனுடன் சிக்கிய பலே திருடன்!