ETV Bharat / state

விஜய் ஆண்டனி மகள் உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 10:36 PM IST

விஜய் ஆண்டனி மகள் உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி
விஜய் ஆண்டனி மகள் உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி

Vijay Antony daughter Meera dies: நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

விஜய் ஆண்டனி மகள் உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி

சென்னை: தமிழ் சினிமா நடிகரும், முன்னணி இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தனது மனைவி ஃபாத்திமா மற்றும் இரண்டு மகள்களோடு சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் மீரா (16), ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் அனைவரும் ஒன்றாக உணவு உண்டபின் மீரா தனது அறையில் தூங்குவதற்காகச் சென்று உள்ளார். அதையடுத்து, அதிகாலை 3.30 மணியளவில், விஜய் ஆண்டனி தனது மகள் மீராவின் அறைக்குச் சென்று பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து, வீட்டில் பணிபுரிந்து வந்த ஊழியர்களின் உதவியோடு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விஜய் ஆண்டனி தனது மகள் மீராவை காரில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தேனாம்பேட்டை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட மீரா கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததும், இதற்காக அவர் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது.

மேலும் மீரா கடந்த சில வாரங்களாகவே, வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுடன் சரியான முறையில் பேசாமல் தனிமையில் இருந்து வந்ததும் போலீசரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வீட்டில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், தற்கொலை செய்து கொண்ட மீராவின் தந்தை விஜய் ஆண்டனி, அவரது தாய் ஃபாத்திமா, சகோதரி ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மீரா மேற்கொண்டு வந்த சிகிச்சை தொடர்பான ரிப்போர்ட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், எந்த விதமான மன அழுத்தத்தில் மீரா சிக்கியிருந்தார் என்பது குறித்து மீராவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து, தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா என்பது உள்ளிட்ட கோணங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பின்பு, மீராவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகளுக்கு நடிகர் சிம்பு, பார்த்திபன், இயக்குநர் மிஷ்கின், சுசீந்திரன், சத்யராஜ், சிபிராஜ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் கூறுகையில், “இது நண்பனுக்கு நடந்த சோகமாக நான் பார்க்கவில்லை. இந்த நிகழ்வு என்பது எனது வீட்டில் நடந்ததைப்போல் உணர்கிறேன். மன அழுத்தம் என்பது எல்லோருக்கும் இருக்கிறது. மாணவர்கள் பள்ளிகளில்தான் அதிக நேரம் இருக்கிறார்கள். நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. பெற்றோர்கள், ஆசிரியர்கள் எல்லாம் குழந்தைகளுக்கு தைரியம் தர வேண்டும்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து நடிகர் சத்யராஜ் கூறுகையில், “விஜய் ஆண்டனிக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இதை விட துயரம் என்பது எதுவும் இருக்காது” என தெரிவித்தார். இது குறித்து நடிகரும், இயக்குநருமான மிஷ்கின் கூறுகையில், “நான் காலையில் கேட்ட அதிர்ச்சியான தகவல் இது தான். என் குழந்தை இறந்தது போல் நான் அதிர்ந்து போனேன்.

அவர் தற்போது உயரமான இடத்திற்கு சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருப்பது, மிகவும் கவலைக்குறியதாக இருக்கிறது. வாழ்க்கை ஒரு புதிராக இருக்கிறது. மரணம் தான் அந்த புதிரில் இருந்து நம்மை விடுபட வைக்கிறது. நான் மிகவும் வருத்தத்துடன் இந்த இடத்தை விட்டு செல்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் கூறுகையில், “யார் ஆறுதல் கூறினாலும், இந்த இழப்பு சரி ஆகாது. மன உலைச்சல் தற்போது சமூகத்தில் அதிக அளவில் இருக்கிறது. இளைஞர்கள் மற்றும் யாரும் இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது” என்று தெரிவித்தார். மேலும், மீராவின் உடலானது நாளை காலை 11 மணியளவில் வீட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்டு, கீழ்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "பிரதமராக மோடி, முதல்வராக எடப்பாடி பழனிசாமி” - ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.