ETV Bharat / state

தீரா கடன் தொல்லை ஆறா வடுவாக மாறிய கொடூரம்.. பெற்ற மகளை கொன்று விட்டு தந்தை தற்கொலை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 10:24 AM IST

Updated : Aug 24, 2023, 11:26 AM IST

Suicide
கடன் தொல்லையால் தற்கொலை

ஆன்லைன் மோகம் காரணமாக கடன் தொல்லையில் சிக்கி குடும்பமே தற்கொலை செய்து உயிரிழந்த சோக சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை: அயனாவரம் பூசனம் தெருவில் வசித்து வந்தவர் கீதா கிருஷ்ணன் (வயது 52). இவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்டு. 23) இரவு இவரது வீட்டிற்கு ஓட்டேரியைச் சேர்ந்த லட்சுமிபதி என்பவர் வந்து நீண்ட நேரமாக கதவை தட்டி உள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் உடனே சந்தேகமடைந்த லட்சுமிபதி ஜன்னல் வழியாக பார்த்து உள்ளார்.

அப்போது கீதா கிருஷ்ணன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் தகவல் அறிந்த அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த போது, கீதா கிருஷ்ணன் தனது 6 வயது மகள் மானசாவை கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்து கொண்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, 2 பேரின் உடலையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது கடன் தொல்லையால் குடும்பமே உயிரிழந்த சோக சம்பவம் தெரியவந்ததாக கூறினர். அதாவது கோட்டூர்புரத்தில் வசித்து வந்த கீதா கிருஷ்ணனுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு பேராசிரியை கல்பனா என்பவருடன் காதல் திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு குணாலிஸ்ரீ மற்றும் மானசா என இரு மகள்கள் இருந்து வந்த நிலையில் கீதா கிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுப்பட்டு பல பேரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் மனைவி கல்பனாவுக்கும், கீதா கிருஷ்ணனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தோர் நெருக்கடி கொடுத்ததால் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள கீதா கிருஷ்ணன் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு கீதா கிருஷ்ணன் மூத்த மகள் குணாலினிஸ்ரீயை கொலை செய்துவிட்டு மனைவி கல்பனா தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அப்போது அதிர்ச்சியில் உறைந்த கீதா கிருஷ்ணன் தற்கொலை முடிவில் இருந்து மனம் மாறி இளைய மகள் மானசாவுடன் திருப்பதிக்கு தப்பிச்சென்ற நிலையில், அவர் சென்னை வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் 3 மாத சிறை தண்டனைக்குப் பிறகு, சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த கீதா கிருஷ்ணன் தனது மகள் மானசாவுடன் அயனாவரத்தில் தங்கி வந்துள்ளார். மேலும் கடன் தொல்லை மீண்டும் இவரை சூழ்ந்ததால் ஒருவரிடம் கடன் வாங்கி அந்த கடனை அடைத்து வந்துள்ளார். இதற்கிடையே கீதா கிருஷ்ணனுக்கு சொந்தமான வீட்டை லட்சுமிபதி என்பவருக்கு லீசுக்கு விடுவதாக கூறியுள்ளார்.

அதற்காக கீதா கிருஷ்ணன் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் பணத்தை வாங்கிய கீதா கிருஷ்ணன் வீட்டை லீசுக்கு விடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் லட்சுமிபதி பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் தரவில்லை. இந்த நிலையில் தான் பணத்தை வாங்க அவரது வீட்டிற்கு லட்சுமிபதி சென்ற போது, தன் மகளை கொலை செய்து விட்டு கீதா கிருஷ்ணன் உயிரை மாய்த்து கொண்டதாக தெரிய வந்து உள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Suicide
தற்கொலையை தவிர்க்கவும்!

இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

Last Updated :Aug 24, 2023, 11:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.