ETV Bharat / state

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு 6,000 கன அடியாக அதிகரிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 10:35 AM IST

உபரி நீர் திறப்பு 6,000 கன அடியாக அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் ஏரி

Chembarambakkam lake: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணாமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு 6,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

சென்னை: கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3,000 கன அடியை கடந்த நிலையில், அணையிலிருந்து உபரி நீர் திறப்பு 6,000 கன அடியாக மேலும் அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,098 கன அடியாக உள்ளது. இதனால், 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமானது, தற்போது 22.53 அடியை எட்டியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து 2,888 அடியாக இருந்த நிலையில், இரவு பெய்த கனமழை காரணமாக 3,098 கன அடியாக உயர்ந்துள்ளது. 3,645 கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 3,256 கன அடியாகும்.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் மேலும் அதிகரிக்கப்பட்டு, தற்போது விநாடிக்கு 6,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து 2,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், 6,000 கன அடியாக உயர்த்தி திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வானப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கையாக வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: பெரம்பலூரில் மேய்ச்சல் பகுதியில் கிடைத்த வெண்கல அம்மன் சிலை - பூஜித்து வழிபட்ட பொதுமக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.