ETV Bharat / state

Minister Ponmudi: அமைச்சர் பொன்முடி, எம்பி பொன் கௌதம சிகாமணி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

author img

By

Published : Jul 17, 2023, 8:29 AM IST

Updated : Jul 17, 2023, 12:07 PM IST

அமலாக்கத்துறை சோதனை
அமலாக்கத்துறை சோதனை

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக எம்பியுமான பொன் கௌதம சிகாமணியின் வீடுகளில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறனர்.

அமைச்சர் பொன்முடி, எம்பி பொன் கௌதம சிகாமணி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ள காட்சி

சென்னை: தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வரும் பொன்முடி மற்றும் அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீடு, விழுப்புரத்தில் உள்ள எம்.பி கௌதம சிகாமணி வீடு உட்பட அவர்களுக்கு தொடர்புடைய ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை 7 மணி முதல் சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2007 திமுக ஆட்சியில் சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி இருந்த போது பதவியை துஷ்பிரயோகப்படுத்தி செம்மண் குவாரிகளில், குவாரி நிபந்தனைகளை மீறி விழுப்புரத்தில் சட்டவிரோதமாக 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மூலமாக அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இதனையடுத்து அமைச்சர் பொன்முடி, ஜெயசந்திரன் உட்பட மூன்று பேரை கடந்த 2012-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த போது அதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இவ்வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் ஏதும் நடந்துள்ளதா என அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அந்த காலக்கட்டத்தில் அமைச்சர் பொன்முடி எங்கு சொத்துக்களை வாங்கியுள்ளார், வெளி நாட்டில் ஏதும் முதலீடு செய்துள்ளாரா என்ற கணக்கு வழக்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. சோதனைக்கு பிறகே என்ன வழக்கு, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் எவ்வளவு என்ற முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கைது செய்துள்ள நிலையில், மீண்டும் மற்றொரு திமுக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பாஜகவினரை கற்களை கொண்டு விரட்டிய இஸ்லாமியர்கள் - வாணியம்பாடியில் பரபரப்பு!

Last Updated :Jul 17, 2023, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.