ETV Bharat / state

ரூ.1.5 கோடி மோசடி வழக்கில் ஹரி நாடாருக்கு போலீஸ் காவல்!

author img

By

Published : Mar 9, 2023, 7:46 PM IST

ரூ.1.5 கோடி மோசடி வழக்கில் ஹரி நாடாருக்கு 1 நாள் போலீஸ் காவல்!
ரூ.1.5 கோடி மோசடி வழக்கில் ஹரி நாடாருக்கு 1 நாள் போலீஸ் காவல்!

100 கோடி கடன் பெற்றுத் தருவதாக தொழிலதிபரிடம் 1.5 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைதான ஹரி நாடாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குலத்தைச் சேர்ந்தவர், ஹரி நாடார். இவர் மீது தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கட் ரமணியிடம் தொழில் வளர்ச்சிக்காக 360 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி 7 கோடி ரூபாய் கமிஷன் பெற்றுத் தருவதாக மோசடி செய்த வழக்கில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து தொழிலதிபர்களான இஸ்மாயில் சக்ராத் மற்றும் பஷீர் ஆகியோரிடம் 100 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி 1.5 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் ஹரி நாடாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹரி நாடாரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஹரி நாடாரிடம் விசாரணை நடத்த 2 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று (மார்ச் 9) நடைபெற்றது. அப்போது ஹரி நாடாரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து மோசடி செய்த பணத்தில் ஹரி நாடார் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளாரா அல்லது வேறு ஏதாவது தொழிலில் பணத்தை முதலீடு செய்து உள்ளாரா என விசாரணை நடத்த இருப்பதாகவும், மேலும் இதேபோல வேறு யாரிடமாவது ஹரி நாடார் மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பாகவும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

முன்னதாக கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஹரி நாடார் போட்டியிட்டார். இதில் 37,726 வாக்குகள் பெற்று அந்த தொகுதியில் 3வது இடத்தைப் பிடித்தது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் அதிக வாக்குகள் பெற்ற சுயேட்சை வேட்பாளர் என்ற பெயரையும் பெற்றார்.

பின்னர் மோசடி வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் ஹரி நாடார் விசாரணைக் கைதியாக இருந்தார். இதனிடயே தொழிலதிபர் இஸ்மாயில் கொடுத்த புகாரின் அடிப்படையில், 22 மாதங்களுக்குப் பிறகு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரசித் தீபா தலைமையிலான காவல் துறையினர், கடந்த பிப்ரவரி 27 அன்று பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் இருந்த ஹரி நாடாரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

முன்னதாக ஹரி நாடாரை வருகிற மார்ச் 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹரி நாடாருக்கு வரும் 16ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.