ETV Bharat / state

6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை ஏன்?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

author img

By

Published : Dec 13, 2022, 2:26 PM IST

Updated : Dec 13, 2022, 3:11 PM IST

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை - மா.சுப்பிரமணியன் புதிய தகவல்
பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை - மா.சுப்பிரமணியன் புதிய தகவல்

6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மத்திய அரசு மூலம் நிரந்தர தடை பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டில் Monocrotopho, Profenophos, Acephate, Profenophos+Cypermethrin, Chlorpyriphos+Cypermethrin மற்றும் Chlorpyriphos என்ற ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கான தடையும், எலி பேஸ்ட்க்கு நிரந்தர தடையும் விதித்து இன்று (டிச.13) அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தற்கொலைக்கு காரணமான பூச்சி கொல்லி மருந்துகள்கள் தடை செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. உயிர் கொல்லி மருந்தான எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது 3 சதவீதம் மஞ்சள், பாஸ்பரஸ் உட்பொருளை கொண்ட எலி மருந்து பேஸ்ட்டை நிரந்தரமாக தடுக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தடை விதிக்கப்பட்ட பொருட்களின் மொத்த விற்பனையும், சில்லரை விற்பனையும் தடை செய்யப்படுகிறது. அந்த மருந்து பொருள்களை வாகனத்தில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு அபாயகர பூச்சி கொல்லிகளுக்கு 60 நாட்களுக்கு தடைக்கு வேளாண் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதை மேலும் 30 நாள் நீட்டிக்க விதிகளில் இடம் உள்ளது. இந்த 6 பொருள்களுக்கு மத்திய அரசு மூலமே நிரந்தர தடை பெற முடியும். தற்போது 6 உயிர்கொல்லி மருந்துகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதன் மூலம், தற்கொலைகள் குறைவதை மத்திய அரசுக்கு எடுத்து கூறி அந்த பூச்சி கொல்லிகளுக்கு நிரந்தர தடை பெற முயற்சிப்போம்.

மருந்தகங்களில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் அனைத்தும் எளிதாகவும், வெளிப்படையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே தற்கொலை செய்வோர் அதனை எளிதில் வாங்குகின்றனர். சானிப் பவுடரில் ' வண்ணக் கலப்பு ' இருப்பதால் தொழில்துறை மூலம் அரசாணை பெற வேண்டி உள்ளது.

விரைவில் அதற்கான தடை ஆணையும் பிறப்பிக்கப்படும். 104 என்ற எண்ணில் ஆலோசனை மையம் மூலம் மாவட்டம் தோறும் மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. 36 அரசு கல்லூரி மருத்துவமனையிலும் 'மனம் ' என்ற அமைப்பு தொடங்கப்படும். அதன் மூலம் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மனநல பயிற்சி வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு திடகாத்திரமான மன நலனுக்கான பயிற்சி வழங்கப்படும்.

ஒரு வாரத்தில் முதலமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் வாரணாசியில் அண்மையில் கூட்டம் நடந்தது. இந்தியாவில் தொலைத்தொடர்பு மூலம் மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவ சேவை அதிகம் வழங்கப்படும் மாநிலமாக தமிழ்நாட்டுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 8,713 துணை சுகாதார நிலையங்கள் உள்ள நிலையில், அவற்றில் பலவற்றின் மூலம் மத்திய அரசின் இ-சஞ்சீவினி திட்டத்தை அமல்படுத்தி வருகிறோம். இ- சஞ்சீவினி மூலம் கிராம மக்களுக்கு அதிக மருத்துவ சேவை வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

எலி பேஸ்ட் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல்பட்டு வந்தார். எலிகளை மட்டுமே கொல்லும் எலி மருந்தும் இருக்கிறது. ஆனால் மனித உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.

எலிகளை கொல்ல தனியாக மருந்து இருக்கிறது. அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட மருந்துகள் குறித்து கடிதம் எழுதப்படும். தடையை மீறி குறிப்பிட்ட பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கலப்பு திருமணம் செய்வோருக்கு எந்த மாதிரியான அரசு வேலையில் முன்னுரிமை: நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

Last Updated :Dec 13, 2022, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.