அதிமுகவை அழிப்பதற்கென்றே ஈபிஎஸ் ஒரு சூனியமாக வந்துள்ளார் - கோவை செல்வராஜ்

author img

By

Published : Sep 18, 2022, 7:25 PM IST

Etv Bharat
Etv Bharat ()

அதிமுகவை அழிப்பதற்கென்றே எடப்பாடி பழனிசாமி ஒரு சூனியமாக வந்துள்ளார் என ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் விமர்சித்துள்ளார்.

சென்னை: அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு பயணித்த பண்ருட்டி ராமச்சந்திரனை மிகவும் தரமற்று பேசியுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாகவும்; எடப்பாடி பழனிசாமி, தலைமைப்பண்பு இல்லாதவர் எனவும்; அதிமுகவை அழிப்பதற்கென்றே ஈபிஎஸ் ஒரு சூனியமாக வந்துள்ளார் எனவும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

தலைமைப் பண்பு அற்ற ஈபிஎஸ்: சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ், "இரண்டு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு ஆர்ப்பாட்டத்தில் எந்த கோரிக்கைக்கு சென்றாரோ? அந்த கோரிக்கையை மறந்துவிட்டு கட்சியினுடைய மூத்த தலைவர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு பயணித்த பண்ருட்டி ராமச்சந்திரனை மிகவும் தரமற்று பேசியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலுக்கு வரும்போது, எடப்பாடி பழனிசாமி அரை டவுசர் அணிந்து பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருப்பார். எடப்பாடி பழனிசாமி தலைமைப் பண்பு இல்லாதவர்.

மக்கள் பணியை மறப்பதா? ஜெயலலிதாவால் நல்ல தலைவர் எனப்பெயர் எடுத்தவரை, எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பவர்களை எல்லாம் எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். அவர் முதலமைச்சரான பிறகு அதிமுக நான்காக பிரிந்துள்ளது. அதிமுக மக்கள் பிரச்னையினை எடுத்து வைக்காமல் உட்கட்சி சண்டையிட்டுக்கொண்டுள்ளதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான்.

கோவை செல்வராஜ் சென்னையில் பேட்டி

அதிமுகவை அழிக்க வந்தவர்: கோடநாடு வழக்கு தீர்ப்பில் குற்றவாளி யார்? என்று தெரியும்போது, இவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி நடைபெறும். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போது வரை இருக்கும் பழனிசாமி செய்த தவறுகள் பட்டியலிட்டு சொல்லப்படும். அதிமுக கட்சியை அழிப்பதற்கென்றே ஒரு சூனியமாக வந்துள்ளார், எடப்பாடி பழனிசாமி.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறை தொடர்ந்து ரெய்டு செல்வது தவறில்லை. தவறு செய்யாமல் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம். அதை விட்டுவிட்டு எஸ்.பி. வேலுமணி இல்லம் முன்பு அதிமுக தொண்டர்கள் அமருவது கண்டனத்திற்குரியது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: மோடி பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.