ETV Bharat / state

'திமுக அரசு எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மின் தடை ஏற்படுகிறது' - ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

author img

By

Published : Apr 13, 2023, 11:03 PM IST

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி

'தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் அதிமுக அரசால் கொடுக்கப்பட்டு வந்தது;ஆனால், திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுகிறது' என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,
விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள், அண்ணாமலை வெளியிடும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து பட்டியல் வெளியிட்ட பிறகுதான் கருத்து கூற முடியும். அரசுக்கு எதிராக குறைகளை எடுத்துரைத்தாலும் எதுவும் மக்களிடத்தில் செல்வதில்லை.

சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் மக்கள் குறைகளை எடுத்துக்கூறும்போது அதனை சட்டப்பேரவையில் நீக்கி வெளியிடுகிறார்கள். நான் பேசும் கருத்துகளை சட்டப்பேரவைத் தலைவர் அனுமதிப்பதில்லை. தொடர்ந்து சட்டப்பேரவையில் இதற்கான குரலை எழுப்பி வருகிறோம்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என பலமுறை கூறியுள்ளேன். சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் அடியோடு கெட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை உள்ளிட்டவை நடந்து கொண்டு வருகிறது. விருதாச்சல சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து, 13 மணி நேரத்திற்குப் பிறகு முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், முதலமைச்சர், சட்டப்பேரவையில் தகவல் கிடைத்த உடனே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அந்த தகவல் அறிக்கையானது காவல் துறையினரால் பதியப்பட்டுள்ளது. சம்பவத்தை சட்டப்பேரவையில் பேசியதை கூட எடிட் செய்து தான் பொதுமக்களுக்கு வெளியிடுகிறார்கள். இதைப் பார்க்கும்போது இந்த ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பது குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அம்மா ஆட்சியின் போதும்; அம்மா ஆட்சிக்குப் பிறகும் தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் அதிமுக அரசால் கொடுக்கப்பட்டு வந்தது.

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் ஏற்படுகிறது. நிர்வாக திறமையின்மை இதற்கு காரணம், அந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தரப்பட்டு தான். ஆனால், தற்போது திமுக அரசு அதனை கொடுக்கவில்லை. இது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் கட்டமைப்பு சரி இல்லை என பொய்யான தகவலைச் சொல்லி வருகிறார்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பேசாமல் பழைய செய்திகளை குறித்து திமுக அரசு பேசியிருக்கிறது. தற்போது உள்ள பிரச்னையை பேச வேண்டும். அது எப்படி தீர்வு காணும் வேண்டும் என்பது குறித்துப் பேச வேண்டும்.

ஆனால், அது குறித்த தகவலை திமுக அரசு தெரிவிப்பதில்லை. தமிழ்நாட்டில் எந்தெந்த பார்களில் விற்பனை அதிகமாக இருக்கிறதோ அந்தந்த பார்களை எடுத்து 24 மணி நேரமும் மதுபான விற்பனையை செய்து வருகிறார்கள். அதிமுக அரசு இருக்கும்போது பார்கள் செயல்படுவதை கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால், இப்போது 24 மணி நேரமும் செயல்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் காவலருக்கு சிகிச்சை சரியில்லை எனக் கூறி போராட்டம் செய்யக்கூடிய நிலை தான் தமிழ்நாட்டில் தற்போது இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஜனநாயகம் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தான் நிலை வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் நால்வர் பலி - குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.