ETV Bharat / state

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிக்கிய ஆவணங்கள்? டிஜிபியை நாடிய அமலாக்கத்துறை - என்ன காரணம்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 5:13 PM IST

தமிழ்நாடு டிஜிபி-யை நாடிய அமலாக்கத்துறை
தமிழ்நாடு டிஜிபி-யை நாடிய அமலாக்கத்துறை

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் புகார் அளித்து உள்ளனர்.

மதுரை: அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி-யிடம் அமலாக்கத்துறை புகார் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் சுரேஷ்பாபு மீது 2018ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்த நிலையில், வழக்கை அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு வழக்கில் இருந்து விடுவிக்க, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக இதற்கு மருத்துவர் ஒப்புதல் தெரிவிக்காத நிலையில், இறுதியாக 51 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டு, முதல் தவணையாக 20 லட்ச ரூபாயை மருத்துவர் கொடுத்ததாக கூறப்படுகிறது. மீதித் தொகையை உடனடியாக கொடுக்க வேண்டும் என அங்கித்திவாரி அவரை அவசரப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவர் சுரேஷ்பாபு கடந்த நவம்பர் 30ஆம் தேதி அன்று திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்க, போலிசாரின் அறிவுறுத்தல்படி சுரேஷ்குமார் கொடுக்க வேண்டிய மீத பணத்தை வாங்கிய போது வருமானவரித்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக கைது செய்தனர்.

இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை அமலாக்கத்துறை அலுவலகம், அங்கித் திவாரியின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலிசார் மற்றும் இந்தோ-திபெத் துணை ராணுவ படையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கடந்த மூன்று நாட்களாக தொடரப்பட்ட சோதனையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சில முக்கிய ஆவணங்களை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்டம் அமலாக்கத்துறை சார்பில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் கடிதம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதில் "மதுரை மாவட்டத்தில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அத்துமீறி சோதனையில் ஈடுபட்டனர். ஒரு வழக்கை முடிவு செய்யும் இடத்தில் அங்கீத் திவாரி இல்லாத நிலையில் அமலாக்கத்துறை அலுவலகம் முழுவதும் சோதனை செய்து உள்ளனர்.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனுமதி இன்றி சுமார் 35 நபர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இந்த சோதனையில் வழக்கில் தொடர்பு இல்லாத மிக ரகசிய ஆவணங்கள் எடுக்கப்பட்டு உள்ளது சந்தேகத்தை வலுக்கின்றது. லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையில் வெறும் ஆறு பேர் மட்டுமே சோதனையில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், அவர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனைக்கு வரும்போது சீருடை அணியவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை அடையாள அட்டை காண்பிக்கப்படவில்லை. எனவே, அவர்கள் 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் - என்.ஐ.ஏ வசம் போன ஆவணங்கள்! அடுத்து என்ன நடவடிக்கை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.