ETV Bharat / state

சுற்றுச்சூழலுக்கேற்ற மின்சாரப் பேருந்து சேவை தமிழ்நாட்டில் அறிமுகம்!

author img

By

Published : Feb 22, 2020, 12:53 AM IST

Eco-friendly electric bus service tamilnadu
சுற்றுச்சூழலுக்கேற்ற மின்சாரப் பேருந்து சேவை தமிழ்நாட்டில் அறிமுகம்!

சென்னை : போக்குவரத்துத் துறையில் சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற மின்சாரப் பேருந்து சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Eco-friendly electric bus service tamilnadu
சுற்றுச்சூழலுக்கேற்ற மின்சாரப் பேருந்து சேவை தமிழ்நாட்டில் அறிமுகம்!

இதனை அறிமுகம் செய்து வைத்து பேசிய அவர், 'சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில், 525 புதிய மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது. மேலும் மின்சார கார், ஆட்டோ, பைக் வாகன பயன்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறன்றன. இதனை கருத்தில் கொண்டு மின்சார வாகன பயன்பாடுகள் குறித்த கல்வி வழங்க 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் 4.77 கோடி ரூபாய் செலவில், தகுதிவாய்ந்த நபர்களுக்கு மின் வாகனத் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கான சிறப்புத் திட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்பாட்டுத் தேவையை நிறைவு செய்யும் வகையில், தொழிற்பயிற்சி நிலையங்களின் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு சென்னையில் தமிழ்நாடு திறன் பயிற்சி நிலையம்1.60 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்’ என்றார்.

இது பற்றி வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குனரக அதிகாரிகள் தெரிவிக்கையில், மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆட்டோமொபைல் பொறியியல் துறையில் மின்சார வாகனங்களுக்கான பாடத் திட்டம் சேர்க்கப்பட உள்ளது.

இதன் மூலம் ஆண்டுக்கு 3 ஆயிரம் மாணவர்கள் வரை மின் வாகன பொறியியல் பயிற்சி பெற திட்டமிடப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வர உள்ளது. மின் வாகன பயிற்சி கொடுப்பதற்காக 53 மின்சார கார்கள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முதல் கட்டமாக 53 ஐ.டி.ஐ ஆசிரியர்களுக்கு சென்னை ஐ.ஐ.டியில் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்இ உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் மின்வாகன தொழில் பயிற்சி அளிக்க 2020-2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நெகிழி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு மாற்றாக மின்சாரத்தால் இயங்க கூடிய வாகன பயன்பாட்டை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தாய்மொழியே நம் உணர்ச்சி: மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.