ETV Bharat / state

அதிமுக ஆட்சியில் காணாமல்போன 3 லட்சம் டன் நிலக்கரி - செந்தில்பாலாஜி

author img

By

Published : Jan 3, 2022, 6:25 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

கடந்த அதிமுக ஆட்சியில் மூன்று லட்சம் டன் நிலக்கரி காணாமல்போயுள்ளது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

சென்னை: அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று (ஜனவரி 3) நடைபெற்றது.

பின் செய்தியாளரைச் சந்தித்த செந்தில்பாலாஜி, "கடந்த பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நான்கு காலத்தில் ஏழாயிரத்திற்கும் அதிகமான மின்மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆயிரத்து 72 மின்மாற்றிகள் விரைவில் மாற்றப்படும்.

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் பணி நிறைவேற்றப்படும். அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களுக்குமான நடவடிக்கைகளையும் விரைவாக நடத்தி முடிக்க பணிகள் நடைபெற்றுவருகின்றன.

ஐந்தாயிரத்து 300 கடைகள் உள்ள நிலையில், மூன்றாயிரம் கடைகளுக்கு மட்டுமே டெண்டர் போடப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 715 விண்ணப்பங்கள் வந்துள்ளன. கட்சிப் பாகுபாடின்றி வெளிப்படைத்தன்மையுடன் டெண்டர் நடைபெறும்.

2019ஆம் ஆண்டு 66 விதிமுறைகள் இருந்தன; அவையேதான் தற்போதும் கேட்கப்பட்டுள்ளன. கரோனா காலம் என்பதால் கூடுதலாக இரண்டு விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. முழு ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டுதான் விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.

யாருடைய டெண்டரும் வாங்க மறுக்கவோ, டெண்டர் பிரிக்காமலோ இல்லை. கடந்த ஆட்சியில் ஒரு சிலருக்கு உரிய வழிமுறைகள் இல்லாமல், கடைகள் நடத்த அனுமதி அளித்ததால், மின்சாரத் துறைக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது.

கோடை காலத்தில் மின் பற்றாக்குறை இல்லை

கோடை காலத்தில் மின் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மழைக்குப் பின் விரைவாக மின்சாரம் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோடை காலத்திற்குத் தேவையான மின் உற்பத்தி தற்போது உள்ளது.

90% புகார்கள் தீர்க்கப்பட்டன

புதிய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மின் விநியோகம் செய்யும் நடவடிக்கைகளை துறை மேற்கொள்ளும். இதுவரை 90 விழுக்காடு அளவிற்கு மின்னகத்திற்கு வந்த புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன.

ஓபிஎஸுக்குப் பதில்

கடந்த ஆட்சியில் இரண்டு லட்சத்து 66 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தில் மீட்டர் பொருத்தப்பட்டது. இதனை மறந்தோ, மறைத்தோ எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை விட்டுள்ளார்.

மின் கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை

மின் கட்டணங்களைப் பொறுத்தவரை எந்தவித ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளே பின்பற்றப்பட்டுவருகின்றன. புதிய உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

3 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை

கடந்த ஆட்சியில் மூன்று லட்சம் டன் நிலக்கரி காணாமல்போயுள்ளதாக அமைக்கப்பட்ட குழுவின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலுவைத் தொகை 34 கோடி ரூபாய் வசூல்

நிலுவைத் தொகை 34 கோடி ரூபாய் மின்சாரத் துறை மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுவை அதிக விலைக்கு விற்பனை செய்த 134 பேர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க டாஸ்மாக் அலுவலர்கள் ஆய்வுசெய்து-வருகின்றனர். அதிக விலைக்கு மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

2000 கோடி ரூபாய் சேமிக்க முடியும்

தமிழ்நாடு மின் வாரியத்திற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் உள்ள நிலையில் அதற்காக வாரியம் செலுத்தக்கூடிய வட்டி விகிதம் 9.5 விழுக்காடு தொடங்கி 13.5 விழுக்காடு வரை செலுத்திவருகிறது. வட்டி செலுத்தக்கூடிய விழுக்காட்டின் தொகையைக் குறைக்க, குறைந்த வட்டிக்கு கடன்களை மாற்றுவதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம். இந்த வட்டி குறைப்பின் மூலம் ஒரு வருடத்திற்கு மின்சார வாரியத்திற்கு 2000 கோடி ரூபாய் சேமிக்க முடியும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பொங்கல் பண்டிகைக்கு 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும்' - அமைச்சர் ராஜ கண்ணப்பன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.