ETV Bharat / state

சென்னையில் பிப்.14ஆம் தேதி குடிநீர் நிறுத்தம்..! எந்தெந்த பகுதிகள்..?

author img

By

Published : Feb 11, 2023, 10:50 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை மாநகரின் நீராதாரமாக உள்ள, செம்பரம்பாக்கம் ஏரியில் மதகுகள் பராமரிப்பு காரணமாக சென்னைக்கு குடிநீர் பிப்.14ஆம் தேதி நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு காரணமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் பிப்.14ஆம் தேதி நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும் ஏரியில் செம்பரம்பாக்கம் ஏரியானது மிகவும் முக்கியமானது. 500 ஆண்டுகள் பழைமையான ஏரியான செம்பரம்பாக்கத்தின் நீர்மட்டம் 24 அடியாக உள்ளது. இதில் பதினாறு கண் மதகுகள் மற்றும் ஐந்து கண் முக்கிய மதகுகளும் உள்ளன. கோடைக்காலத்தில் சென்னை மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்வதில் மிக முக்கிய பங்குகளை செம்பரம்பாக்கம் ஏரி வகிக்கிறது. இந்த நிலையில் குடிநீர் குழாய் பராமரிப்பு காரணமாக பிப்.14ஆம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: இதுகுறித்து சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத்துறையினர் மேற்கொள்ள உள்ளதால் அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு உட்பட்ட பகுதிகளில் பிப்.14 அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள், அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையும் இன்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தவறான சிகிச்சை; இலங்கை பெண்ணுக்கு வட்டியுடன் ரூ.40 லட்சம் வழங்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.