ETV Bharat / state

விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கு - கீழ் நீதிமன்றத்தின் ஆட்சேபகரமான வார்த்தைகளை நீக்க உத்தரவு

author img

By

Published : May 5, 2023, 10:24 PM IST

Etv Bharat
Etv Bharat

தற்கொலை செய்து கொண்ட டிஎஸ்பி விஷ்ணுப்பரியாவை கோழை என்று தீர்ப்பில் குறிப்பிட்ட கோவை மாவட்ட நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம், ஆட்சேபகரமான வார்த்தைகளை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரணை செய்த டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து நடத்த கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிடக்கோரியும், தீர்ப்பில் ஆட்சேபகரமான பகுதிகளை வழக்கிலிருந்து நீக்கவும் உத்தரவிடக்கோரி விஷ்ணுப்பிரியாவின் பெற்றோர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அதில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ், மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுவாதியுடன் இருப்பதை அறிந்த ஒரு கும்பலால் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்ட நிலையில், ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ், ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு டிஎஸ்பியாக பணியாற்றிய விஷ்ணுப்பிரியா, கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரணை செய்யும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விசாரணை அதிகாரியான டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவை பொய்யான நபர்களைக் கைது செய்ய, அப்போதைய நாமக்கல் எஸ்.பி. செந்தில் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர்.

இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி தனது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். விஷ்ணுப்பிரியாவின் தற்கொலை வழக்கை விசாரித்த சிபிசிஐடி தற்கொலைக்கு எந்தத் தூண்டுதலும் இல்லை எனத் தெரிவித்ததால் பின்னர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ விசாரணை அறிக்கை ஏப்ரல் 2018இல் தாக்கல் செய்தது. பின்னர், இரண்டாவது அறிக்கையில் விஷ்ணுப்பிரியாவின் தற்கொலைக்குத் தூண்டுதல் காரணமல்ல என சிபிஐ ஆகஸ்ட் 2019இல் தாக்கல் செய்தது. சிபிஐ அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்த தலைமை நீதித்துறை நடுவர், ''இறந்தவர் ஒரு கோழை, குடும்பம் மற்றும் துறை சார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, முட்டாள்தனமாக வாழ்க்கையில் தோல்வியுற்ற பெண்ணைப் போல அழிந்துவிட்டார்'' என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதியை நீக்க வேண்டும் என விஷ்ணுப்பிரியாவின் பெற்றோர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார், "கீழமை நீதிமன்றம் தீர்ப்பில் அத்தகைய மொழியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து இருக்க வேண்டும். இந்த வழக்கில், இதுபோன்ற மேற்கோள்களை குறிப்பிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை,''என்று குறிப்பிட்டு, கீழ் நீதிமன்றத்தின் உத்தரவில் உள்ள ஆட்சேபகரமான பகுதிகளை நீக்குமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: சித்ராபௌர்ணமி முழுநிலவு திருவிழா: பச்சை பட்டுடுத்தி அருள்பாலித்த கண்ணகி தேவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.