ETV Bharat / state

Thagaisal thamizhar award 2023: கி.வீரமணிக்கு "தகைசால் தமிழர்" விருது!

author img

By

Published : Aug 1, 2023, 3:04 PM IST

Thagaisal
தகைசால் தமிழர் விருது

2023ஆம் ஆண்டுக்கான "தகைசால் தமிழர்" விருதிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின்போது முதலமைச்சர் ஸ்டாலின் விருதை வழங்கவுள்ளார்.

சென்னை: தமிழ்நாடு அரசு இன்று(ஆகஸ்ட் 1) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் 'தகைசால் தமிழர்' என்ற பெயரில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் ஆணைக்கு இணங்க விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, 'சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு' ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு, நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962-ல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist - (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துக்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும், திராவிடர் கழகத் தலைவருமான கி. வீரமணிக்கு 2023ஆம் ஆண்டிற்கான 'தகைசால் தமிழர் விருது' வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

தகைசால் தமிழர் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட கி. வீரமணிக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் கி.வீரமணிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக 2022ஆம் ஆண்டுக்கான 'தகைசால் தமிழர் விருது' இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது, தகைசால் தமிழர் விருதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அப்போது, விருதுக்கான 10 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டு பத்திரத்தைப் பெற்றுக் கொண்ட நல்லகண்ணு, 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை சேர்த்து பத்து லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

இதையும் படிங்க: "பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் முயற்சிக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் நல்லக்கண்ணு"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.