ETV Bharat / state

மருத்துவர் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய தொகுப்பு முறைக்கு எதிர்ப்பு: டாக்டர்கள் சங்கம் கூறும் காரணம் என்ன?

author img

By

Published : Jun 12, 2023, 10:01 PM IST

Etv Bharat
Etv Bharat

இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களை 'அகில இந்தியத் தொகுப்பு முறையில்' வழங்குவதை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என சமூக சமத்துவ டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கும் மத்திய அரசே மாணவர் சேர்க்கையை நடத்த முயல்வது கடும் கண்டனத்திற்குரியது எனவும், மாநில உரிமைகளுக்கு எதிரான இந்த முடிவை தேசிய மருத்துவ ஆணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து சமூக சமத்துவ டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறும்போது, "மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்கள் உட்பட, நாடு முழுவதும் உள்ள 100 சதவீதம் இளநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கும், மத்திய அரசே மருத்துவக் கல்வி கலந்தாய்வு குழு மூலம் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்த முயல்கிறது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது மாநில உரிமைகளுக்கு எதிரானது. மேலும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயலாகும்.

ஏற்கனவே நீட் நுழைவுத் தேர்வு (NEET Entrance Exam) மூலம் மாநில உரிமைகளை மத்திய அரசு பறித்துவிட்டது. 2017 முதல் DM மற்றும் MCH போன்ற உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் 100 சதவீதம் இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை உரிமையை மத்திய அரசு மாநில அரசிடம் இருந்து பறித்துக் கொண்டுவிட்டது.

தற்பொழுது, நெக்ஸ்ட் (NEXT) என்ற தேர்வு மூலம் மத்திய அரசே 100 சதவீதம் இடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்துவதன் மூலமாக மாநில அரசின் உரிமைகளை முற்றிலுமாக பறிக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீதம் இட ஒதுக்கீடு, அருந்ததியர் மற்றும் முஸ்லீம் உள் ஒதுக்கீடு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

அதே போல் தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கடைபிடிக்கப்படும் இட ஒதுக்கீடுகளும் பாதிக்கப்படலாம். இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் எதுவும் குறிப்பிடப்பட வில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் தனியார் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்கள் அந்த மாநில அரசுகளுக்கு வழங்கும் இடங்களும் பாதிக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் 65 சதவீதம் இடங்களும் கிடைக்காமல் போகலாம். அந்த இடங்களில் 69 சதவீதம் இட ஒதுக்கீடும், அரசுப் பள்ளி மாணவர்களுக்குமான 7.5 சதவீதம் இட ஒதுக்கீடும், இதர உள் ஒதுக்கீடுகளும் பாதிக்கப்படும்.

மத்திய அரசின் இந்த முடிவு, மாநில அரசுகளின் இடங்களுக்கு மாநில அரசும், மத்திய அரசின் இடங்களுக்கு மத்திய அரசும் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்டப் பிரிவு (NMC act - 2019) Chapter IV, 14(3) க்கு எதிரானது. எனவே, மத்திய அரசு 100 சதவீதம் இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தும் முடிவை திரும்பப் பெற வேண்டும்.

அகில இந்திய தொகுப்பு (All India Quota) இடங்கள், பல்வேறு பிரச்சனைகளுக்கும், மாணவர் சேர்க்கை காலதாமதமாவதற்கும் காரணமாகிறது. மாநில உரிமைகளுக்கும் எதிராக உள்ளது. எனவே, அகில இந்தியத் தொகுப்பு முறையை ரத்து செய்ய வேண்டும். இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்குவதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு மாநில அரசும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசும் மட்டுமே, இறுதி கட்டம், கடைசி இடம் வரை மாணவர் சேர்க்கை ஆகியவற்றை நடத்திட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்திட எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.

பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கும், தற்போதைய மாப் அப் கலந்தாய்வு (mop up counselling) மற்றும் ஸ்ட்ரே கலந்தாய்விற்கு (stray counselling) தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கிடக் கூடாது. எம்.பி.பி.எஸ் (MBBS) படிப்பில் முதலாமாண்டு தேர்வை 4 முயற்சிகளில் (Four attempts) முடிக்க வேண்டும். எம்.பி.பி.எஸ் படிப்பை 9 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகள் பழிவாங்கும் போக்கிற்கு வழிவகுக்கும். சமூக நீதிக்கு எதிராக அமையும். நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்கிறது.

ஒரே தேசம், ஒரே மருத்துவ முறை, ஒரே மருத்துவக் கல்விச் சந்தை என்ற தனது திட்டத்தையும், மருத்துவக் கல்வியையும், மருத்துவத்தையும் இந்துத்துவ மயமாக்க வேண்டும் என்ற மறைமுகத் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்துகிறது. இந்த பிரச்சனைகள் குறித்து விவாதித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க அனைத்து கட்சி மற்றும் அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிட வேண்டும். அனைத்து மாநில முதல்வர்களுக்கும் இப்பிரச்சனை குறித்து கடிதம் எழுதிட வேண்டும்.

மேலும், சென்னை பாரிமுனை பேருந்து நிலையம் அருகில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர் விடுதியையும், விடுதி உள்ள இடத்தை, மருத்துவத் துறை அல்லாத வேறுத் துறை பயன்பாட்டுக்கு மாற்றுவதை கைவிட வேண்டும். அதே இடத்தில், MMC முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு புதிய விடுதியை கட்டித்தர வேண்டும்" என கூறினார்.

இதையும் படிங்க: தமிழக ஆளுநருக்கு எதிராக வலுக்கும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.