ETV Bharat / state

தமிழக அரசு மீது களங்கம் விளைவிக்க அமலாக்கத்துறை முயல்கிறது - திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோ பேட்டி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 6:48 PM IST

Updated : Nov 28, 2023, 7:19 PM IST

dmk-mp-nr-elango-interview-against-ed-summons-to-district-collector-in-sand-quarries-and-bail-case-of-minister-senthil-balaji
தமிழக அரசு மீது களங்கம் விளைவிக்க அமலாக்கத்துறை முயல்கிறது - திமுகு எம்.பி என்.ஆர்.இளங்கோ பேட்டி!

DMK MP N R Elango: மணல் குவாரி சோதனை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரிய வழக்கு குறித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு குறித்தும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ செய்தியாளர் சந்தித்துப் பேசும் போது, "அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படையான ஒரு வழக்கு உரிய காவல்துறையால் பதியப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். அமலாக்கத்துறை 4 முதல் தகவல் அறிக்கையை வைத்துக்கொண்டு இந்த வழக்கை விசாரிக்கப் போவதாகச் சொல்லியுள்ளார்கள். அந்த 4 வழக்குகளும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மணல் குவாரிகளுக்கு சம்பந்தம் இல்லாதவை.

தனியார் மணல் கொள்ளைக்காரர்களால் நடத்தப்பட்ட குவாரிகளில் போலியாக ஆதாரங்களை வைத்துக்கொண்டு அமலாக்கத்துறை இந்த வழக்கைப் பதிவு செய்து தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், "நாங்கள் எவ்வளவு மணல் கொள்ளை நடந்துள்ளது என்பதைச் சேகரித்துள்ளோம்" எனப் பொய்யான தகவல்களை உயர்நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார்கள். ஆனால், மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்பதை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மணல் விவகாரத்தில் கொள்ளை போயிருப்பதாக அமலாக்கத்துறைக்குத் தகவல் கிடைத்தாலும், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் 66ன் கீழ் அரசிற்கும், அரசின் புலன் விசாரணை அமைப்புகளுக்கும் தகவல் தந்து தான் விசாரிக்கச் சொல்லியிருக்க வேண்டும், அமலாக்கத்துறையினரே அந்த விசாரணையை நடத்தக் கூடாது.

அதே போல் மாநில புலன் விசாரணை அமைப்புகளால் மணல் உட்பட ஏதேனும் விவகாரங்களில் குற்றம் நடந்திருப்பதாக முதல் தகவல் அறிக்கை கொடுக்கப்பட்டால் மட்டும் தான், அந்த விவகாரத்தில் சட்டவிரோதமாகப் பணம் கைமாறப்பட்டுள்ளதா? என்ற வகையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியும்.

அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லாத மணல் கொள்ளை நடந்ததா? இல்லையா? என்ற விசாரணையைச் சட்டத்திற்குப் புறம்பாக நடத்தக் கூடாது என்று நமது சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று தற்போது நீதிமன்றம் விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், சட்டப்படி அமலாக்கத்துறை இந்த விசாரணையைச் செய்ய முடியாது. தமிழக அரசின் புலன் விசாரணை அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு தவறு நடந்திருப்பதாக முதல் தகவல் அறிக்கை கொடுத்தால், அதன் அடிப்படையில் சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா? என்ற விசாரணையை மட்டும் தான் அமலாக்கத்துறை செய்ய முடியும்.

அரசு அதிகாரிகளை அழைக்கும் போது பிரிவு 50, 2ன் கீழ் சம்மன் கொடுக்க அதிகாரம் கிடையாது. அது முறையற்ற புலன் விசாரணை. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்ட அடிப்படையில் அமலாக்கத்துறையினர் மாநில அரசின் அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்றால் பிரிவு 54ன் கீழ் மட்டும் தான் சம்மன் கொடுத்து விசாரிக்க வேண்டும்.

மத்திய அரசு எங்குப் புலன் விசாரணை செய்ய வேண்டுமோ, அங்கு மட்டும் தான் செய்ய வேண்டும் மாநில அரசின் அதிகாரங்களைக் கையில் எடுப்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்ற வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த வழக்கு பாஜக-வின் கையாளாகச் செயல்படும், அமலாக்கத்துறை தமிழக அரசின் மீது களங்கம் விளைவிக்க மட்டுமே போட்டுள்ளார்கள் என்பது அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தந்துள்ள பதில் மனுவிலே குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. அப்போது, தேர்தல் பரப்புரையில் அமித்ஷா, அதிமுக ஆட்சியில் ஏறக்குறைய ரூ. 20 ஆயிரம் கோடிக்கு மேல் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டார். ஆனால் பாஜக-வினர், அதிமுக மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மணல் கொள்ளை குறித்த வழக்குகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் எவ்வளவு மணல் கொள்ளை வழக்குகள் உள்ளன என்ற பட்டியலையும் நீதிமன்றத்திலும் சமர்ப்பித்துள்ளோம். அங்கு அமலாக்கத்துறையினர் எந்த புலன் விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை.

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி உள்ள நேரத்தில், திமுக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் ரூ.4730 கோடி அரசிற்கு வந்திருக்க வேண்டியது வரவில்லை என பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

2011 - 12 ஆம் ஆண்டில் 31 லட்சம் லோடுகள் மணல் விற்பனை அரசால் நடந்துள்ளது. 2020 – 21ஆம் ஆண்டில் 1.5 லட்சம் லோடுகள் மட்டும் தான் விற்பனை செய்ய முடிந்தது. ஆற்று மணலுக்குப் பதிலாக இ-சேண்ட் மணல் விற்பனைக்கு வந்ததால் மக்களிடம் ஆற்று மணல் வாங்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. 2021 – 22ஆம் ஆண்டில் அது 80 ஆயிரம் லோடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படை ஆய்வு மற்றும் அறிவு கூட இல்லாமல் 27.75 லட்சம் லோடுகள் விற்கப்பட்டிருக்க வேண்டும் என்ற தவறான கணக்கைப் பதில் மனுவில் தாக்கல் செய்துள்ளனர். விளக்கம் கேட்ட நோட்டிஸில், தமிழக அரசு மணல் கொள்ளையைத் தடுக்க சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டும் தான் காரணம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

தற்போது பாஜக-வின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளதாலும், மக்கள் அவர்கள் மீது கோபமாக இருப்பதாலும் மிகப்பெரிய பின்னடைவு வரக்கூடிய தேர்தலில் அவர்களுக்கு ஏற்படும். பாஜக-வினர் யாரையாவது திட்டுகிறார்கள் என்றால் அவர்கள் நல்லவர்கள் என்று மக்கள் புரிந்துகொள்வார்கள். பொய்யர்கள் கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக - பாஜக கூட்டணி விரிசல் என்பதும் போலியான நாடகம் என்பதைப் பலமுறை திமுகவின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் வாதிகள் மீது மட்டும் தான் பாஜகவினர் வழக்குப் போட்டுள்ளனர். அரசு அதிகாரிகளை மிரட்டி ஒரு வாக்குமூலம் வாங்கினால் அதை வைத்து வழக்குப் போட முடியாதா என்றும் அமலாக்கத்துறையினர் பார்க்கின்றனர். முத்தையா என்ற அதிகாரி கூறும் போது கூட, தன்னை துன்புறுத்தி அமலாக்கத்துறையினர் வாக்குமூலம் வாங்கியதாகப் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளதோடு காவல்துறையில் புகாரே கொடுத்துள்ளார்.

இந்த வழக்கை முழு விசாரணைக்கு வரும் 21ஆம் தேதி எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் கூறியுள்ளது. அப்போது அரசு குவாரிகளில் எந்தவிதமான மணல் கொள்ளையும், முறைகேடுகளும் நடக்கவில்லை என்பதை உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து என்.ஆர்.இளங்கோ பேசும் போது, "சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்ட அடிப்படையில் சிறையில் இருக்கும் ஒருவர், ஜாமீன் வேண்டும் என்றால் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்திற்கு நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதே நேரம், அவரின் உடல்நிலை பாதிப்படைந்திருந்தால் இந்த விதி தளர்த்தப்படும்.

அதனால் தான், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கேட்டோம். அது நீதிமன்றத்திற்குத் திருப்தியாக இல்லை என்பதால் கீழ் நீதிமன்றத்திற்குச் சென்று முறையிடச் சொல்லியுள்ளார்கள். ஜாமீன் வழங்குவதற்காக முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் கருதியிருந்தால் வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கலாம், ஆனால் அப்படிச் செய்யாமல், ஜாமீன் வழங்க முகாந்திரம் இருப்பதால் கீழ் நீதிமன்றம் சென்று தகுதியின் அடிப்படையில் (Merits) கேட்க அறிவுறுத்தியுள்ளார்கள்.

செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கும் பொய்யான ஆதாரங்களின் அடிப்படையில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது. அதைத் தகுதியின் அடிப்படையில் (Merits) ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்வோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Last Updated :Nov 28, 2023, 7:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.