ETV Bharat / state

GCC: பொது சிவில் சட்டம் - திமுக எதிர்ப்பு; சட்ட ஆணையத்திற்கு துரைமுருகன் கடிதம்!

author img

By

Published : Jul 12, 2023, 2:14 PM IST

Updated : Jul 12, 2023, 8:45 PM IST

பொது சிவில் சட்டத்தை எதிர்த்து சட்ட ஆணையத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடிதம்
பொது சிவில் சட்டத்தை எதிர்த்து சட்ட ஆணையத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடிதம்

பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்ட ஆணையத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை: பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சட்ட ஆணையத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ''தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம், மக்களவையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அத்துடன், சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கி வரும் கட்சியாகும். பகுத்தறிவுக்கு ஒவ்வாத சடங்கு, சம்பிரதாயங்கள், பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள், பிறப்பின் அடிப்படையிலான வேற்றுமைகள் ஆகியவற்றுக்கு எதிரான வலிமையான குரல் எழுப்பி வந்துள்ளது.

அதே நேரத்தில், இந்திய மக்கள் பல்வேறு மத, மொழி, இனக்குடும்பமாக வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் அவரவர் பழக்கவழக்கங்களை அவரவர் பின்பற்றுகின்றனர். இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை பிரிவு 25-ன்படி குடிமக்கள் அனைவரும் தாங்கள் சார்ந்துள்ள மத வழக்கங்களைப் பின்பற்றவும், பரப்பவும் உரிமை பெற்றவர்களாவர். இத்தகைய வேறுபாடுகள் நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தை வலிமையாக்கி உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு முறை ‘திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, பல ஆறுகள் கலப்பினும் தன்னுடைய தனித் தன்மையை இழக்காத கடல் போன்றது’ என்று குறிப்பிட்டார். இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் ‘ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு பண்பாடு’ என்ற கொள்கையின் விளைவாக பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படுத்துவதுடன், சட்டம் ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகளை இந்திய சமுதாயத்தில் உருவாக்கும் நிலை ஏற்படும். 21வது சட்ட ஆணையம், பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விரிவான கேள்விகளை முன்வைத்தும், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டும், அதன் அடிப்படையில் பொது சிவில் சட்டம் அவசியமானதுமல்ல, விரும்பத்தக்கதும் அல்ல என்று முடிவெடுத்தது.

பொது சிவில் சட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் வலிமையாக எதிர்க்கிறது. காரணம், இந்தச் சட்டம் தனிநபர் உரிமையான எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியள்ள உரிமைகளை பறிப்பதற்கும், பிரிவு 29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 44 குறிப்பிடும் பொது சிவில் சட்டம், பொதுவான மதம் சாராத பல்வேறு சமூகச் செயல்களுக்கு, குறிப்பாக இரு நபரிடையே ஒப்பந்தங்கள், சொத்துப் பரிமாற்றத்துக்கான சட்டங்கள், பணப் பரிமாற்ற ஆவணங்கள், கருவிகள் குறித்த சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தை வழங்குகிறதே தவிர, மத வழக்கங்களுக்கானது அல்ல.

இந்திய அரசியல் நிர்ணய சபை, இந்தப் பிரிவு 44 குறித்த விவாதத்தை மேற்கொண்ட போது, சென்னை மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் திரு.போக்கர் பகதூர், ‘இந்தியாவில் பல்வேறு மக்கள் குழுக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கடைபிடித்து வந்த பல்வேறு பழக்க வழக்கங்களை ஒரே அடியில் வீழ்த்திவிட முயற்சிக்கிறீர்கள். இதனால் நீங்கள் அடையவிருக்கும் நன்மை என்ன?.

அவர்கள் காலங்காலமாகப் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களைக் கொன்று அவர்களது மனசாட்சியையும் கொல்வதைத் தவிர வேறு என்ன பயன் ஏற்படும்?. இத்தகை கொடுங்கோன்மை மிக்க ஒரு பிரிவு அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறக் கூடாது. இந்து மதத்திலேயே உள்ள பல்வேறு குழுவினர், இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் நிலையில், நான் பேசுவதைக் காட்டிலும் கடுமையாக அவர்கள் பேசும் நிலையில் இந்தப் பிரிவு அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறக் கூடாது.

பெரும்பான்மை மக்கள் இச்சட்டப் பிரிவிவை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னாலும், அதுவும் தவறான வாதம்தான். பெரும்பான்மை மக்களின் கடமை, சிறுபான்மை மக்களின் புனிதப் பழக்க வழக்கங்களைப் பாதுகாப்பதுதான். சிறுபான்மை மக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவது ஜனநாயகம் என்று கூற முடியாது. அது மிகப் பெரிய கொடுங்கோன்மை’ என்று பேசினார். அந்த எதிர்ப்பு இன்றைக்கும் பொருத்தமானது.

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தனிமனித உரிமைகளை பறிப்பது ஏற்புடையதல்ல. சிறுபான்மை மக்களை பாதிக்கும் ஒன்றாக மட்டும் நான் பார்க்கவில்லை. பெரும்பான்மை இந்து மதத்தைச் சார்ந்த பட்டியலின மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள், திருமணம் தொடர்பான சடங்கு சம்பிரதாயங்களையும் இந்தச் சட்டம் அழித்துவிடும். டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் பேசும் போது, இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்பவர்கள், இதனைப் பின்பற்றலாம் என்றுதான் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த அரசு இச்சட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மீதும் திணிக்கும் முயற்சியை இந்த அரசு மேற்கொள்கிறது. இந்திய வாரிசு உரிமைச் சட்டம் 1954, மத நம்பிக்கையற்றவர்களுக்கும் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் பொதுவான சட்டமாகும்.
மேலும் அடிப்படை உரிமைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் எந்தச் சட்டத்தையும் திமுக ஏற்றுக் கொள்ளாது. திமுக ஆட்சிக்காலத்தில் குடிமக்கள் யாரையும் பாதிக்காத வகையில் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

அது போலவே, பலதார மணத்தைத் தடுக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றலாம். மணமுறிவு ஏற்படும் போது மனைவி, குழந்தைகள், பெற்றோர் ஆகியோருக்குத் தேவைப்படும் நிதியை வழங்குவதற்கு குற்றவியல் சட்டப் பிரிவு 125ன் படி உரிமை இதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னொரு முக்கிய சட்டமாக திமுக அரசு நிறைவேற்றிய சட்டம் ‘சிறப்புத் திருமணச் சட்டம்’ இதன் மூலம் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இன்னுமொரு சீரிய நடவடிக்கை என்னவென்றால், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற உத்தரவை பிறப்பித்து, அதன் மூலம் உரிய பயிற்சி பெற்ற யாராக இருந்தாலும், சாதிகளைக் கடந்து அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது மானுடத்தை உயர்த்தியது. ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையைப் பாதிக்கும் எந்த சட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்றக் கூடாது என்பது தான்.

இந்த பொது சிவில் சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 25 மற்றும் 29 ஆகியவற்றை மீறிய சட்டமாக திராவிட முன்னேற்றக் கழகம் பார்க்கிறது. பொது சிவில் சட்டம், ஏற்கனவே இந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956, பிரிவு-2(2) இன் படி பட்டியலின மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள் ஏனைய இந்துமத மக்களின் பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபட்டது எனினும், அவற்றைத் தடை செய்யக்கூடாது என்று கூறுகிறது.

மேலும், இந்து மதத்தில் மட்டும்தான் கூட்டுக் குடும்ப முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையின் மூலம் வருமானவரித் துறை கூட்டுக் குடும்பத்தையே மொத்தமாக ஒரு வரி செலுத்துபவராக ஏற்றுக் கொண்டுள்ளது. அரசியலமைப்புச் சட்ட அட்டவணை VI-ல் உள்ளபடி, அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிஜோரம் ஆகிய மாநிலங்களுக்கு திருமணம், மணவிலக்கு, சமூகப் பழக்க வழக்கங்கள் ஆகியவை மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்டவை.

தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 87 சதவீதம், இஸ்லாமியர்கள் 6 சதவீதம், கிறிஸ்தவர்கள் 7 சதவீதம். இந்த மக்கள் அனைவரும் மதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பொது சிவில் சட்டம் இத்தகைய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறது. இதில் உலக நாடுகளே வியந்து பாராட்டும் நாடு, நமது இந்திய நாடு என்பதை மத்திய அரசு மறந்துவிடக் கூடாது.

எனவே, 22வது சட்ட ஆணையம் 21வது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று திமுக கூறுகிறது” என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Senthil Balaji:அமலாக்கத்துறையின் விசாரணையை எதிர்கொள்ளாதது ஏன்? - நீதிமன்றம் கேள்வி

Last Updated :Jul 12, 2023, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.