ETV Bharat / state

குறைகளைக் கூறிய அதிமுக.. கொள்ளை அடிப்பதாக திமுக குற்றச்சாட்டு.. சூடான சென்னை மாமன்றம்

author img

By

Published : May 31, 2023, 9:02 AM IST

நேற்று நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டத்தில், அம்மா உணவகம் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.

குறைகளைக் கூறிய அதிமுக.. கொள்ளை அடிப்பதாக திமுக குற்றச்சாட்டு.. சூடான சென்னை மாமன்றம்
குறைகளைக் கூறிய அதிமுக.. கொள்ளை அடிப்பதாக திமுக குற்றச்சாட்டு.. சூடான சென்னை மாமன்றம்

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டத்தில், அம்மா உணவகம் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் மே மாதத்திற்கான மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று (மே 30) கூடியது. இந்தக் கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றது.

குறிப்பாக, நேரமில்லா நேரத்தில் பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர் சதீஷ் குமார், “ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாமன்றக் கூட்டத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெருங்குடி ஏரிதான் கந்தன்சாவடி, கல்லுக்குட்டை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.

என் தந்தை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, ஒருவராக அதை பராமரித்தார். அதற்கு பிறகு திமுக சட்டமன்ற உறுப்பினர் அதை கண்டுகொள்வதில்லை. அதுமட்டுமின்றி, என் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு தாயார் செய்வதற்கு சரியாக இயந்திரம் இல்லை என்று, அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தெரிவித்தனர். எனவே, அதை சரி செய்து தர வேண்டும்” என கூறினார்.

இதனையடுத்து பேசிய திமுக மாமன்ற உறுப்பினர் ரவி சந்திரன், “சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. குறிப்பாக, கேப்டன் தோனி எந்த பந்திற்கு, எந்த பகுதியில் ஃபீல்டரை நிற்க வைக்க வேண்டும் என்று கணித்து நிற்க வைத்ததால்தான் அந்த அணி வெற்றி பெற்றது. அதேபோல்தான் முதலமைச்சர் யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு, அவர்களுக்கு அமைச்சர் பணி கொடுத்து சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.

மேலும், கல்லுக்குட்டை பகுதிகளில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், அங்கு வசிக்கும் 13 ஆயிரம் குடும்பங்களுக்கு மாமன்ற உறுப்பினர் சதீஷ் குமார் தந்தையோ (கந்தன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்) அல்லது மாமன்ற உறுப்பினராக இருந்த அவர் சித்தியோ ஏதும் செய்யவில்லை.

அம்மா உணவகத்தில் உள்ள பொருட்களை கொள்ளை அடித்து விற்பதற்கு என ஒரு கடையைத் தொடங்கியவர் சதீஷ் குமாரின் சித்தி அமுதா. அதிமுக ஆட்சியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் அந்தப் பகுதிக்கு செய்யவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது.

என்னுடைய சொந்த செலவில் அவர்களுக்கு தண்ணீர் குழாய் அமைத்துக் கொடுத்தேன். கொள்ளை அடிக்கும் ஆட்சி அதிமுக. நல்லது செய்யும் ஆட்சி திமுக” என தெரிவித்தார். இவ்வாறு திமுக மாமன்ற உறுப்பினர் ரவி சந்திரன் பேசிக் கொண்டு இருக்கும்போது, அதிமுக உறுப்பினர் சதீஷ் குமார் பேச முயற்சி செய்துள்ளார்.

இதன் காரணமாக அதிமுக மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர் சதீஷ் குமார் மாமன்ற கூட்டத்தில் இருந்த வெளியேறினார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சதீஷ் குமார், “பெருங்குடி ஏரியைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை.

தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அங்கு மீன்கள் செத்துக் கிடைக்கிறது. 14வது மண்டலக் குழுத் தலைவர் அவதூறு பேசும் வகையில் மன்றக் கூட்டத்தில் பேசுகிறார். மன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் பேச முறையாக வாய்ப்பு வழங்கவில்லை. பெருங்குடி பகுதியில் சாலை வசதி முறையாக இல்லை. பெருங்குடி ஏரியைப் பாதுகாக்க சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும். ஏன் நிதி ஒதுக்க மாநகராட்சி மறுக்கிறது?” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கவலை.. மாநகராட்சியில் நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.