ETV Bharat / bharat

டெல்லி தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் பலி.. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் இரங்கல் - Death of newborns in Delhi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 8:44 AM IST

President Droupadi Murmu: டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, நீதி விசாரணை செய்யவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

President Droupadi Murmu condoles the Death of newborns in Delhi fire Accident
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு (Credits - ETV Bharat)

டெல்லி: டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் புதிதாக பிறந்த 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த தீ விபத்தின் கோரப்பிடியில் சிக்கி 7 பச்சிளம் குழந்தைகள் பலியாகிய சம்பவத்திற்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'டெல்லி விவேக் விஹாரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் பலியாகிய செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. இந்த அதிர்ச்சியைத் தாங்கும் சக்தியை இழந்த பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு இறைவன் தரவேண்டும். இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்ற குழந்தைகளும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'புதுதில்லியில் உள்ள மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளின் உயிர்கள் மிகவும் துயரத்தில் உள்ளன. துயரத்தின் இந்த நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்' என்று கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'டெல்லியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை நொறுக்கியுள்ளது. இந்த நம்பமுடியாத இக்கட்டான நேரத்தில் துயரமடைந்த குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த கோர விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து இழப்பீடாக அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதேபோல, இக்குற்ற சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு டெல்லி தலைமைச் செயலாளருக்கு டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவிட்ட நிலையில், விபத்துக்குள்ளான மருத்துவமனையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல, 7 பச்சிளம் குழந்தைகளை பறித்த இந்த பயங்கர விபத்து குரித்து நீதி விசாரணை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், குழந்தைகள் நல மருத்துவமனை தீ விபத்து குறித்து நீதி விசாரணை செய்ய வேண்டியது அவசியம். ஆகவே, மாவட்ட ஆட்சியர், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்டோர் இது குறித்து விசாரிக்குமாறு உத்தரவிடப்படுகிறது. இவ்விபத்துக்கு பொறுப்பான நபர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இனிவரும் காலங்களில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டும். விரைவில், இது தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் பயங்கர தீ விபத்து: 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு.. நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து.. சிலிண்டர் வெடிப்பா? - Babies Died In Delhi

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.