ETV Bharat / state

ரஜினி, விஜய்க்கு தேவைப்படும் போது எனக்கு தேவைப்படாதா? - இயக்குநர் அமீர் கேள்வி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 6:19 PM IST

இயக்குநர் அமீர்
இயக்குநர் அமீர்

Vetrimaaran: இங்கு சூப்பர் ஸ்டாருக்கும், தளபதிக்கும் பக்கத்து மாநில ஸ்டார்கள் தேவைப்படுகின்றனர். எனக்கு வெற்றிமாறனோ வெற்றிமாறனுக்கு நானோ தேவைப்படுவது புதிதில்லையே என அமீர் கூறியுள்ளார்.

இயக்குநர் அமீர்

சென்னை: தமிழ் சினிமா இயக்குநர்கள் அமீர் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் மாயவலை. இப்படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சஞ்சனா ஷெட்டி, சரண், தீனா, சத்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் அமீர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மாயவலை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று நடந்த மாயவலை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் அமீர், வெற்றிமாறன், சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சினேகன், தீனா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் அமீர் பேசும் போது, “ஒரு தயாரிப்பாளராக இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உங்களை சந்திக்கிறேன். இப்படத்தை எடுக்க முதல் காரணம் இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் தான். இப்போது உள்ள பத்திரிகையாளர்களுக்கு இவரை தெரியாது. அதர்மம், சத்யராஜ் நடித்த பகைவன், தடயம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். நான் இவரிடம் உதவி இயக்குனராக ஆசைப்பட்டேன்.

எனக்கும் அவருக்குமான உறவு குறித்து யாருக்கும் தெரியாது. எனது அனைத்து படங்களிலும் என்னுடன் இருந்தவர். சினிமா அறிவு உள்ளவர்களை ரசிப்பது தான் எனது வேலை. அவருக்கு சினிமா அதிகம் தெரியும். நிறைய நடிகர்களிடம் சென்றோம் ஆனால் யாரும் நடிக்க முன்வரவில்லை அதனால் பின்னர் நானே நடித்தேன் என்றார். மேலும் எனது நண்பர்கள் என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை தயாரிக்க முன்வந்தனர்.

இப்படத்தை முழுவதுமாக முடித்து விட்டு உங்களை சந்திக்கிறேன். இது எனக்கே புது அனுபவமாக உள்ளது. வெற்றிமாறன் படத்தை பார்த்துவிட்டு தானே வெளியிடுவதாக கூறினார். இது எங்களது டீமுக்கு கிடைத்த வெற்றி. அவருக்கு நன்றி. யுவன் சங்கர் ராஜா எனக்கு உதவியாக இருந்தார்.

ராம் படத்தில் இருந்து இப்போது வரை எனக்கு உறுதுணையாக இருக்கிறார் யுவன். நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா இந்தப் படத்தில் நடித்துள்ளார். சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நான் நடிப்பது ஒளிப்பதிவாளர் ராம்ஜிக்கு பிடிக்காது. இந்த படத்திலும் நடிக்க வேண்டாம் என்றார். பிறகு படத்தை பார்த்துவிட்டு பரவாயில்லை தேறிவிடுவார் என்றார். இது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம்” என்று பேசினார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “வட சென்னை படத்துக்காக அமீரை சந்தித்தேன். என் படம் என்றதும் நடிக்கிறேன் என்றார். நண்பர்கள் எல்லோரும் இவர் மூன்று நாள்தான் என்றனர். ஆனால் இப்போது வரை இருவருக்குள்ளும் எந்த பிரச்சனையும் இல்லை. மனித உறவுகளின் ஏற்படும் சிறிய சம்பவம் எப்படி மாறுகிறது என்பது இப்படம்.

எனது படங்களை எல்லாம் பார்க்க அமீர், ரமேஷ் இருவரும் வருவார்கள். இப்படத்தில் எல்லா நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர். அமீர் ஒரு நடிகராக நன்றாக பண்ணியுள்ளார். அமீரின் நட்புக்காக இதனை வெளியிடுகிறேன் என்றார். நீங்கள் மிகப் பெரிய இயக்குநர் உங்களுக்கே வெற்றிமாறன் தேவைப்படுகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அமீர், இங்கு சூப்பர் ஸ்டாருக்கும் தளபதிக்கும் பக்கத்து மாநில ஸ்டார்கள் தேவைப்படுகின்றனர்.

எனக்கு வெற்றிமாறனோ வெற்றிமாறனுக்கு நானோ தேவைப்படுவது புதிதில்லையே என்றார். சூர்யா உடன் இருந்து நான் ஒதுங்கி விட்டேன். கொஞ்சம் கோபக்காரன் நான். சுயமரியாதையுடன் பயணிப்பவன். சூர்யா, கார்த்தியுடன் மீண்டும் இணைவேனா என்றால் வாய்ப்பு கிடைத்தால் பணியாற்றுவேன். ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை, அதனால் நானும் போகவில்லை என்றார். அவர்கள் அழைத்தேன் என்று சொன்னார்களே என்றதற்கு என்னிடம் நேரிடம் வந்து சொல்ல சொல்லுங்கள்” என்றார்.

வெற்றிமாறன் அளித்த பதில், “வாடிவாசல் படத்தில் அமீர் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இவர் மதுரைக்காரர் என்பதால் எனக்கு உறுதுணையாக இருப்பார். இவருடைய ’இறைவன் மிகப் பெரியவன்’ படத்துக்கு ஆர்வமாக காத்துக் கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "எங்கிருந்துடா வரீங்க நீங்களாம்?" - Happy Street நிகழ்ச்சியை விமர்சித்த நடிகர் ரஞ்சித்.. கோவையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.