ETV Bharat / state

Operation Children missing: 48 மணி நேரத்தில் 121 குழந்தைகள் மீட்பு

author img

By

Published : Jun 10, 2023, 10:14 AM IST

Operation Children missing
குழந்தைகள்

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளை கண்டறியும் ஆப்பரேஷனில் கடந்த 48 மணி நேரத்தில் 121 குழந்தைகளை மீட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை: உலகில் ஒவ்வொரு ஒரு நிமிடத்திற்கும் ஒரு குழந்தை காணாமால் போவதாகவும், அப்படி காணாமல் போகும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தையை பற்றிய தகவல் கிடைக்காமலே போவதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஒரு குழந்தை எப்படி காணாமல் போகிறது என ஆய்வு செய்ததில், ஒரு குழந்தை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படும்போது இது போன்ற முடிவுகளை எடுக்கிறது.

அதாவது, பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காத நேரத்தில் ஒரு குழந்தை வீட்டை விட்டு வெளியேறலாம் என்ற முடிவை எடுக்கிறது. மேலும், பாலியல் வன்புணர்ச்சியால் பாதிக்கப்படும் குழந்தை, குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தல், ஆர்கான் கடத்தல், பெற்றோர் மற்றும் படிப்பிற்கு பயந்து செல்லுதல் உள்ளிட்டவை இதில் அடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், குழந்தைகள் காணாமல் போனதற்கு எந்த வகையான காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தொலைந்து கிடைக்காத குழந்தைகள் அனைவருமே காணாமல் போன குழந்தைகளின் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

ஆகையால், தமிழ்நாட்டில் இதுவரை காணாமல் போன குழந்தைகளை கண்டறிவதற்காக 'ஆபரேஷன் மிஸ்ஸிங் சில்ரன்' என்ற பெயரில் ஒரு சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட அனைத்து காவல் ஆணையர் மற்றும் எஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன மற்றும் கண்டுபிடிக்கப்படாத வழக்குகளின் பட்டியல் தயாரித்து சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார். அதற்காக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களின் உதவியுடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஆகியோர் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், அனைத்து காவல் நிலையங்களில் உள்ள காவல் ஆய்வாளர்கள் இந்த சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு காணாமல் போல குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இரண்டு தினங்களுக்கு முன்பு உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, நேற்று வரை (24 மணி நேரத்தில்) 25 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் என மொத்தம் 27 குழந்தைகள் கண்டறியப்பட்டனர். பிறகு கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள் அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, இந்த தேடல் வேட்டை தொடரும் என காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இத்திட்டம் தொடங்கி கடந்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு காவல் துறை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் இதுவரை 97 பெண் குழந்தைகள் மற்றும் 24 ஆண் குழந்தைகள் என மொத்தம் 121 காணாமல் போன குழந்தைகளை மீட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சிறப்பு நடவடிக்கையானது தொலைந்த அனைத்து குழந்தைகளையும் கண்டறியும் வரை தொடரும் எனவும் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் துறையை அனுகலாம். மேலும், ஏதேனும் ஒரு குழந்தையை மர்ம நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக கடத்தி செல்வது போல தெரிந்தாலோ அல்லது சாலை போன்ற பொது இடங்களில் குழந்தை தனியாக இருப்பது போல உணர்ந்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் துறையை அனுகலாம்.

முடியாத பட்சத்திற்கு காவல் துறை அவரச எண்ணை அல்லது குழந்தைகள் ஹெல்ப்லைன் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இல்லையெனில் www.trackthemissingchild.gov.in என இணையத்திலும் புகாரை பதிவு செய்யலாம் அவ்வாறு செய்யும் போது காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

அதேநேரம் 18 உள்பட்ட குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தாலோ அல்லது வீட்டை விட்டி வெளியேற வேண்டிய எண்ணம் தோன்றினாலோ உடனடியாக சைல்டு ஹெல்ப்லைன் 1098 என்ற இலவச தொலைதொடர்பு எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அங்கு குழந்தைகளுக்காகவே 24 மணி நேரமும் பணியாற்றும் அதிகாரிகள் தங்கள் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வைத் தருவார்கள்.

இதையும் படிங்க: Operation Missing Children: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.