ETV Bharat / state

சவால்களை சிறப்பாக எதிர்கொண்ட தமிழ்நாடு காவல்துறை - டிஜிபி பாராட்டு

author img

By

Published : Nov 9, 2022, 7:28 AM IST

சவால்களை சிறப்பாகக் எதிர்கொண்ட தமிழ்நாடு காவல்துறை
சவால்களை சிறப்பாகக் எதிர்கொண்ட தமிழ்நாடு காவல்துறை

தமிழ்நாடு காவல்துறை கடந்த சில மாதங்களில் பெரும் சவால்களை சிறப்பாகக் கையாண்டதற்கு பாராட்டு தெரிவித்து, தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு அனைத்து காவல் துறையினருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழ்நாடு காவல்துறை நடைபெற்று முடிந்த விநாயகர் சிலை ஊர்வல நிகழ்வுகளை சிறப்பாகவும், அமைதியான முறையிலும் தமிழ்நாடு முழுவதும் நடத்தியுள்ளதாகவும், செப்டம்பர் 28 ஆம் தேதி குறிப்பிட்ட ஓர் இயக்கம் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த பல வன்முறைச் சம்பவங்களை காவல்துறையினர் எதிர்கொண்டு அமைதியை நிலை நாட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அசாதாரண சூழ்நிலைகளில் பாதுகாப்புப் பணிகளை துரிதமாக கையாளும் திறனில் ஓர் உயர்ந்த அளவீட்டினை தமிழ்நாடு காவல்துறை எட்டியுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அதேபோல செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற்ற மருது சகோதரர்கள் பிறந்த நாள் நிகழ்வுகளில் தமிழ்நாடு காவல்துறையால் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு, இந்நிகழ்சிகள் சிறப்புற நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாகவும், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான அக்டோபர் 23 ஆம் தேதி கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடைபெற்ற கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை அனைத்து தடயங்களையும் திரட்டி இறந்த நபரை அடையாளம் கண்டதுடன், அச்சம்பவத்தில் தொடர்புடைய 6 முக்கிய நபர்களை 24 மணி நேரத்திற்குள் கைது செய்ததாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ள அவர், இந்தச் சம்பவத்தை அறிவுப்பூர்வமாகவும், துரிதமாகவும், பொறுப்புணர்வுடனும் காவல்துறை கையாண்டதால் தீபாவளி பண்டிகை எந்தப் பதற்றமும் இல்லாமல், கோலாகலமாக கொண்டாடப்பட்டதாகவும், அதைப் பாராட்டி சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் அழைத்து பாராட்டுச் சான்று வழங்கியதையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழாவில் சுமார் 10 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, அந்த நிகழ்ச்சி சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற செய்ததை சுட்டிக்காட்டியுள்ள டிஜிபி, மெய் வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், இரவு பகலாக ஓய்வின்றி, காவல் துறையினர் பணியாற்றிய விதம் போற்றுதலுக்குரியது.

தமிழ்நாடு காவல்துறையின் இந்த அர்பணிப்பும், ஒற்றுமை திறனும், சிறப்பான செயல்பாடும் நாட்டிற்கே ஒரு முன் உதாரணமாக திகழ்கிறது எனவும் பாராட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அனைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளையும், சவால்களையும் கடந்த சில மாதங்களாக திறம்பட கையாண்ட காவல் துறையினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், இதேபோல தொடர்ந்து வீரத்துடனும், விவேகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கடமையாற்ற அனைத்து காவல்துறையினரையும் வாழ்த்துகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தி மொழியை திணிக்கக்கூடாது என்பது பிரதமரின் விருப்பம் - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.