ETV Bharat / state

நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் மறைவு: மாமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்!

author img

By

Published : Nov 28, 2022, 1:24 PM IST

நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் மறைவு: மாமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்!
நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் மறைவு: மாமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்!

மறைந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்துக்கு, சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம், ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் இன்று (நவ 28) நடைபெற்றது. இதில் கடந்த நவம்பர் 24ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த 165வது வார்டு காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினரும், தென்சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவருமான நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்துக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இந்த இரங்கல் தீர்மானத்தை மேயர் பிரியா முன்மொழிந்தார். இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள், மறைந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் குறித்து பேசினார்கள்.

முக்கியமாக காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் சிவராஜ் சேகரன் பேசுகையில், “சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தூண்களில் ஒருவரை இழந்து விட்டோம். நாஞ்சில் பிரசாத் இழப்பு பேரிடியாக விழுந்து விட்டது” என்றார். தொடர்ந்து மாமன்றத்தின் அதிமுக உறுப்பினர் கே.பி.கே.சதீஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோபிநாத், திமுக மாமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் ராமசாமி மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் இரங்கல் தீர்மானத்தின் மீது பேசினார்கள்.

இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி
இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி

மேலும் மறைந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்றைய மாமன்ற கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், மீண்டும் நாளை காலை 10 மணிக்கு மாமன்றம் கூடும் எனவும் மேயர் பிரியா அறிவித்தார்.

இதையும் படிங்க: 'வானவில் மன்றம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.