ETV Bharat / state

பெருங்களத்தூர் சாலையில் அச்சுறுத்தும் விதமாக சுற்றித் திரிந்த முதலை பிடிக்கப்பட்டது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 4:05 PM IST

பெருங்களத்தூர் சாலையில் அச்சுறுத்தும் விதமாக சுற்றித் திரிந்த முதலை பிடிக்கப்பட்டது
பெருங்களத்தூர் சாலையில் அச்சுறுத்தும் விதமாக சுற்றித் திரிந்த முதலை பிடிக்கப்பட்டது

Perungalathur Crocodile: சென்னை கனமழையின் போது பெருங்களத்தூர் சாலையில் முதலை சுற்றித்திரிந்த நிலையில் வனத்துறையினர் அந்த முதலையை பிடித்து கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள முதலை பண்ணையில் விட்டுள்ளனர்.

பெருங்களத்தூர் சாலையில் அச்சுறுத்தும் விதமாக சுற்றித் திரிந்த முதலை பிடிக்கப்பட்டது

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெருமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிக்கு உள்ளாகினர். தற்போது பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் கனமழை காரணமாக பெருங்களத்தூர் நெடுங்குன்றம் சாலையில் சுமார் 7 அடி நீளமுள்ள முதலை இரவு நேரத்தில் சாலையை கடக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் அந்த முதலை சாதுவான முதலை எனவும் மக்களை பார்த்தால் அந்த முதலை பயப்படக்கூடிய வகையை சார்ந்தது எனவும் விளக்கம் அளித்திருந்தனர்.

மேலும், அந்த முதலையை பிடிப்பதற்கு தீவிரமாக வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை சதானந்தபுரம் ,ஆலப்பபாக்கம் ஜி கே எம் கல்லூரி செல்லும் சாலையில் பெரிய முதலை ஒன்று சாலையோரம் இருந்ததை கண்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், சுற்றுச்சுவர் அருகே முதலை படுத்துக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. பின், உடனடியாக தாம்பரம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தாம்பரம் பீர்க்கன்கரணை காவலர்கள் உதவியுடன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து முதலையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பெருங்களத்தூர் ஆலப்பாக்கம் செல்லும் சாலையில் முழுமையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கடந்த ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் முதலையை பிடித்தனர். அதனைத் தொடர்ந்து முதலையை வனத்துறையினர் வாகனத்தில் ஏற்றி கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள முதலை பண்ணைக்கு கொண்டு சென்றனர்.

இந்த பகுதியில் அடிக்கடி முதலைகள் தென்படுவதும் வனத்துறையினரால் பிடிக்கப்படுவதும் இப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நெடுங்குன்ற பகுதியில் உள்ள ஏரிகளில் ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட முதலைகள் இருக்கிறது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மழை நேரங்களில் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் பேது அல்லது வெயில் காலங்களில் முழுமையாக நீர் வற்றிய நிலையிலும் இந்த முதலைகள் வெளிப்படுவதால் அந்த சமயங்களில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு அனைத்து முதலைகளையும் பிடித்து இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.