ETV Bharat / state

அதிமுக ஆட்சியில் ஆணவக்கொலைகள் மறைக்கப்பட்டன - கே. பாலகிருஷ்ணன்

author img

By

Published : Jun 17, 2022, 9:38 PM IST

கடந்த அதிமுக ஆட்சியில் ஆணவ கொலைகள் பூசி மெழுக பட்டது.. ஸ்டாலின் அரசு அதனை தடுத்து வருகிறது -  கே. பாலகிருஷ்ணன்
கடந்த அதிமுக ஆட்சியில் ஆணவ கொலைகள் பூசி மெழுக பட்டது.. ஸ்டாலின் அரசு அதனை தடுத்து வருகிறது - கே. பாலகிருஷ்ணன்

'ஓபிஎஸ் சட்டமன்றத்தில் பேசும்பொழுது கடந்த ஆட்சியில் ஆணவப்படுகொலை இல்லவே இல்லை என சொன்னார். அனைத்தும் பூசி மெழுகபட்டது. ஆனால் தற்போது இருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அதனை தடுத்து வருகிறது. எனவே இந்தத் தொடர் சாதி மற்றும் ஆணவப்படுகொலை உள்ளிட்டவற்றை இந்த அரசு குறைக்கும் என நம்புகிறோம்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில், கடந்த மே மாதம் 28ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் 3 இளைஞர்கள் சாதிப்பாகுபாட்டால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் மற்றும் வன்கொடுமைத்தடுப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு உடனடியாக தர்மபுரி இளைஞர்களுக்கு நடந்த சம்பவம் தொடர்பான வழக்கை புலன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என முழக்கங்களை முழக்கினர்.

இதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன், "தர்மபுரி தாக்குதல் குறித்து இங்கு அனைவரும் கூடி இருக்கிறோம். இந்த சம்பவத்தை விபத்து என முடிவு செய்ய முடியாது. இதனைத் திட்டமிட்ட படுகொலை வழக்கு என தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி வழக்காக மாற்ற வேண்டும் என முதலமைச்சருக்கு பெரிய கடிதம் எழுதி உள்ளேன். நிச்சயம் அவரை இரண்டு நாட்களில் சந்திக்கும் பொழுது, அவரிடம் இதனை வலியுறுத்திப் பேசுவேன். பல ஆணவ கொலைகளைச் சமீப காலமாக பார்த்து கொண்டு வருகிறோம். ஆனால், கும்பகோணத்தில் நடைபெற்ற பட்டியலினத்தை சார்ந்த பெண்ணுக்கு நடைபெற்ற கொடுமையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தன் தங்கையையே, சகோதரர் வெட்டி கொலை செய்துவிட்டுக் காவல் நிலையத்தில் சரணடைந்து உள்ளார். ஆணவ கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டும் என பேசுகின்ற அதே சூழலில், சமூகத்தில் ஒரு பகுத்தறிவு குறித்த விழிப்புணர்வு தேவை. விபத்து என்று சொன்னால், கால் துண்டித்து 50 அடிக்கு அந்த பக்கம் போய் விழுந்து இருக்குமா?

சாதிய வண்ணம் ஒழிய வேண்டும் என சொன்னால், அதில் மிக முக்கியமான பொறுப்பு நமது காவல் துறையினருக்கு இருக்க வேண்டும். ஆகவே, தான் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கை உட்படுத்த வேண்டும் என எழுதி கோரிக்கை விடுத்துள்ளேன். ஏற்கெனவே ஆட்சியில் இருந்தவர்கள், இதைப் பற்றியெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். அப்படியே பூசி மெழுகி விடுவார்கள்.

அன்றைக்கு துணை முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் சட்டப்பேரவையில் பேசும்பொழுது கடந்த ஆட்சியில் ஆணவப் படுகொலை இல்லவே இல்லை என சொன்னார்கள். அனைத்தும் பூசி மெழுகப்பட்டது. ஆனால், தற்போது இருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அதனை தடுத்து வருகிறது. எனவே, இந்தத் தொடர் சாதி மற்றும் ஆணவப் படுகொலை உள்ளிட்டவற்றை இந்த அரசு குறைக்கும் என நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், "கடந்த 28ஆம் தேதி தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே நடந்த சம்பவம் சாதிய தாக்குதலில், ஜீவா என்ற இளைஞர் கால் துண்டிக்கப் பட்டுள்ளது. தமிழ்ச்செல்வன் எனும் இளைஞரின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் தர்மபுரி காவல் துறையினர் வெறுமனே பார்த்துக்கொண்டே இருக்கின்றனர்.

காவல்துறை இதனை விபத்து வழக்கு என மூடி மறைக்கிறது. தமிழ்ச்செல்வன், தான் காதலிக்கும் பெண்ணை பார்த்துவிட்டு வரும்போது தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அவன் பட்டியல் இனத்தைச் சேர்த்தவர் என்பதால் தான் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. எனவே, இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு விசாரணை வழியாக உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என அவர் பேசினார்.

இதையும் படிங்க: மத கலவரத்தை உருவாக்க மோடி அரசு முயற்சி - கே. பாலகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.