ETV Bharat / state

பாதுகாப்பு உபகரணங்கள் அணியாத தூய்மைப் பணியாளர்கள்.. நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் விளக்கம்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 7:56 PM IST

Chennai Corporation Commissioner
சென்னை மாநகராட்சி கமிஷனர் நீதிமன்றத்தில் விளக்கம்

Chennai Corporation Commissioner: தூய்மைப் பணியாளர்கள் மாஸ்க், கிளவுஸ், ஷூ-க்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளைச் சிறையில் தள்ளும் என பணியாளர்களிடம் கூறியுள்ளதாக மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சென்னை: மக்கும் குப்பை, மக்காத குப்பையைப் பிரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் தூய்மைப் பணியாளர்கள் மாஸ்க், கிளவுஸ், ஷூ-க்கள் பயன்படுத்தாமல் இருந்தால், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் எனக் கூறியுள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் தடை உத்தரவை எதிர்த்த மறு ஆய்வு வழக்குகள், நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் இன்று (டிச.15) மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வீடியோ கால் மூலம் ஆஜராகி இருந்தார்.

அப்போது மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளைப் பிரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள தூய்மைப் பணியாளர்கள், வெறுங்கைகளில் குப்பைகளைப் பிரிப்பது குறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதி ஆஷா, குப்பைகளைச் சேகரிக்கும் இடங்களிலேயே அவற்றைத் தரம் பிரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த மாநகராட்சி ஆணையர், 50 முதல் 60 சதவீதம் மக்கள் வீடுகளிலேயே குப்பைகளைத் தரம் பிரித்துக் கொட்டுவதாகவும், மற்றவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், குப்பைகளைப் பிரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் தூய்மைப் பணியாளர்களுக்கு கிளவுஸ், மாஸ்க், ஷூ-க்கள் வழங்கப்படுவதாகவும், ஆனால் இந்த உபகரணங்களைப் பயன்படுத்துவது தங்களுக்கு அசவுகரியமாக இருப்பதாகக் கூறி பணியாளர்கள் அதனை உபயோகிக்க மறுப்பதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறு உபகரணங்களைப் பயன்படுத்தாவிட்டால், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளை நீதிமன்றம் சிறையில் தள்ளும் என பணியாளர்களிடம் கூறியதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தமிழ் புறக்கணிப்பா? ரயில்வே கேட் எச்சரிக்கை பலகையில் தமிழ் மொழி அகற்றம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.