சென்னை: அரசு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் "முக கவசம் உயிர் கவசம்" விழிப்புணர்விற்காக அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய முகக்கவசம் மாதிரியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். தொடர்ந்து முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கையேட்டையும் மருத்துவ மாணவர்கள், செவிலியர்களுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, "கரோனா வைரஸ் தொற்று தொடங்கியபோது 10 படுக்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் படுக்கைகளுடன் உள்ளன. கரோனா தடுப்பு பணியில் தமிழ்நாடு உலகத்திற்கே முன்மாதிரியாக விளங்கிவருகிறது.
சுகாதாரத்துறைக்கு 2020 மறக்கமுடியாத ஆண்டாக அமைந்தது. உயிர்பயத்தை காட்டிய கரோனாவிற்கு எதிராக மிகச்சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து உள்ளனர். 2021 பாதுகாப்பான ஆண்டாக அமையும் என நம்புகிறோம்.
இலவச கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக மையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி போடுவதன் ஒத்திகைக்காக ஆறு லட்சம் முன்கள பணியாளர்கள் தேர்வு செய்து ஜனவரி 2 முதல் ஒத்திகை நடைபெறும். ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தினால் மேற்கொள்ளும் அனைத்து பணிகளும் ஒத்திகையிலும் மேற்கொள்ளப்படும்.
லண்டனில் இருந்து வந்துள்ள உருமாறிய வைரஸை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம். வைரஸ் தடுப்பூசி வரும் வரை முகக்கவசம் மட்டும் பாதுகாப்பாகும்" என்றார்.
இதையும் படிங்க:வரலாற்று நிகழ்வு... கரோனாவால் களையிழந்த மெரினா - பொதுமக்கள் இன்றி வெறிச்சோடியது!