ETV Bharat / state

மாநில மொழிகளில் அவசரகால அறிவிப்பு: விமான போக்குவரத்துத் துறை விரைந்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Sep 13, 2021, 12:52 PM IST

விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் வழங்குமாறு எழுப்பப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்குமாறு விமான போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் விமானங்களில் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் குறித்த மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "அவசர காலங்களில் பயணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், விமானத்தில் இருந்து தப்பிக்க அவசர வழி எங்கிருக்கிறது, ஆக்ஸிஜன் குறைபாட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் தற்காலிக ஆக்சிஜன் முகக் கவசம் பயன்படுத்தும் முறைகள், சீட் பெல்ட் அணியும் முறைகள், நீர் நிலைகளில் விழுந்தால் தப்பிக்க விமானத்தில் அதற்கான பிரத்யோக ஆடைகள் இருக்கும் இடம், அதனை அணியும் முறை குறித்த செயல்முறை விளக்கங்கள் மற்றும் விளக்க கையேடு ஆகியவை குறித்து விமானம் புறப்படுவதற்கு முன்பு தெரிவிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

அவ்வாறு தற்போது வெளியிடப்படும், கொடுப்படும் அறிவிப்புகள் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. நாட்டின் மக்கள் தொகையில் 50 விழுக்காடு மக்கள் மட்டுமே ஆங்கிலமும், இந்தியும் தெரிந்தவர்கள்.

அவசர காலத்திற்கான இன்றியமையாத விளக்கங்கள் மக்களுக்கு புரிகிற மொழியில் இருக்க வேண்டும் என்பதால், பயணிகள் பாதுகாப்பு கருதி, பாதுகாப்பு அறிவிப்புகள் மற்றும் விளக்க கையேடுகளை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அட்டவணை 8இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், அசாமி, குஜராத்தி, பெங்காலி, காஷ்மீரி, உள்ளிட்ட 23 மொழிகளிலும் வழங்க வேண்டும்.

இந்திய நிறுவனங்களால் நடத்தப்படும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட், கோ ஏர், இண்டிகோ, ஏர் ஏசியா, டாட்டா விஸ்டா ஆகிய விமானங்களில் இதை அமல்படுத்துவதுடன், விமானம் புறப்படும், விமானம் சென்றடையும் மாநிலங்களின் ஆட்சி மொழியில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் விமானப் போக்குவரத்து துறையின் செயலாளருக்கு நான்கு வாரங்களில் புதிதாக மனு அளிக்க உத்தரவிட்டு, மனுதாரரின் யோசனையை பரீசிலித்து எட்டு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிரான மசோதா தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.