ETV Bharat / state

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை தேர்தல்; சென்னை சத்யமூர்த்தி பவனில் ஏற்பாடுகள் தீவிரம்

author img

By

Published : Oct 16, 2022, 9:38 PM IST

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை தேர்தல்
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை தேர்தல்

நேருவின் குடும்பத்தைச்சேர்ந்த யாரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடாமல் 22 ஆண்டுகளுக்குப்பிறகு நாளை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி என நேருவின் குடும்பத்தைச்சேர்ந்த யாரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடாமல் 22 ஆண்டுகளுக்குப்பிறகு நாளை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் 9,300 பேர் அகில இந்திய அளவில் வாக்களிக்க உள்ளனர். தமிழ்நாட்டில் 711 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு இன்று மாலை விமானம் மூலம் டெல்லியில் இருந்து 4 வாக்குப்பட்டிகள் கொண்டுவரப்பட்டன.

தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்காக சத்தியமூர்த்தி பவனில் நான்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட இருக்கிறது. வாக்களிப்பவர்கள் தாங்கள் தேர்வு செய்ய விரும்பும் வேட்பாளர் பெயருக்கு நேராக டிக் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே சத்தியமூர்த்தி பவன் வளாகத்திற்குள் நாளை அனுமதிக்கப்படுவார்கள். காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலராக பிரதாப் பானு சர்மா, உதவி தேர்தல் அலுவலர்களாக நெய்யாற்றின் கரை சனல் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த அஞ்சலி நிம்பல்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்களிக்க வருபவர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் பெயருக்கு நேராக கையெழுத்து போட்ட பின்னர் வாக்குச்சீட்டு வழங்கப்படும். வாக்களித்து முடிந்ததும், அவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வெளியே வந்து விட வேண்டும். தேர்தல் முடிந்ததும் வாக்குப் பெட்டிகள் நாளை இரவே டெல்லி கொண்டு செல்லப்படும். வாக்குகள் 19ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனைத்தொடர்ந்து தேர்தல் பணிகளை பார்வையிடுவதற்காக தேர்தல் நடக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலக சென்னை சத்தியமூர்த்தி பவனிற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் பிரதாப் பானு சர்மா, உதவி அலுவலர் நெய்யாற்றின் கரை சனல், அஞ்சலி நிம்பல்கர் ஆகியோர் வாக்குப்பெட்டியுடன் வருகை தந்தனர்.

பின்னர் சத்தியமூர்த்தி பவானி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில் வாக்கு பெட்டியை பத்திரிகையாளர்களிடம் தேர்தல் அலுவலர் திறந்து காண்பித்தார். மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் அறையைப் பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் அலுவலர் பிரதாப் பானு ஷர்மா, ”அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 711 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக டெல்லியில் இருந்து நான்கு வாக்குப் பெட்டிகளும், வாக்குச்சீட்டுகளும் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாளை காலை வேட்பாளர்கள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆகியோர் முன்னிலையில் வாக்கு மையத்திற்குள் வாக்கு பெட்டிகள் வைக்கப்படும். நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

வாக்களிக்கத் தகுதியுள்ள நபர்களுக்கான அடையாள அட்டை மற்றும் மற்றும் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின்பு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஒரே நேரத்தில் வாக்களிக்கும் மையத்திற்குள் நான்கு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு கதவின் வழியாக உள்ளே வந்து வாக்களித்துவிட்டு மற்றொரு கதவின் வழியாக வாக்காளர்கள் வெளியே செல்வார்கள்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை தேர்தல்

மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நேரம் முடிந்தவுடன் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு அனைவரின் கையெழுத்தைப்பெற்று நாளை இரவு டெல்லிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு வாக்கு என்னும் நாளான பத்தொன்பதாம் தேதி அனைத்துப்பெட்டிகளும் திறக்கப்பட்டு ஒன்றாக கலந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். 22 ஆண்டுகளுக்குப் பிறகு தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் நேர்மையாகவும் ஜனநாயக முறைப்படியும் அமைதியாக நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தி திணிப்பை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது - நாராயணசாமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.