ETV Bharat / state

தவறான சிகிச்சையால் பறிபோன இளைஞரின் கால்.. சென்னையில் பகீர் சம்பவம்!

author img

By

Published : Nov 30, 2022, 9:04 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னையில் இளைஞர் ஒருவருக்கு அளித்த தவறான சிகிச்சையால், அவரது கால் அகற்றப்பட்டு இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: வடபழனியில் உள்ள புத்தூர் கட்டு வைத்தியசாலையில் இளைஞர் ஒருவருக்கு அளித்த தவறான சிகிச்சையால் அவரின் காலை உடலிலிருந்து அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வடபழனியிலுள்ள புத்தூர்கட்டு வைத்தியசாலை மீது புகார்கள் குவிந்து வருகின்றன.

சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் விஜய். இவருக்கு வேளாங்கண்ணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் பார்க்கில் தனது குழந்தையை விளையாட அழைத்து சென்றபோது, தவறி கீழே விழுந்ததில் விஜயின் வலது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விஜயை அழைத்து சென்றநிலையில், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்போட வேண்டும் என அங்கு கூறப்பட்டதாக தெரியவருகிறது.

பின்னர் நண்பரின் மூலமாக வடபழனியில் உள்ள புத்தூர் கட்டு வைத்தியசாலைக்கு சென்ற விஜய்-க்கு, 4 கட்டுக்கள் போட்டால் சரியாகிவிடும் என வைத்தியசாலையில் தெரிவித்ததை நம்பி பணம் அளித்து கட்டுப்போட்டு சென்றுள்ளார். பின்னர், நண்பர் ஒருவரின் உதவியோடு வடபழனியிலுள்ள புத்தூர் கட்டு வைத்தியசாலைக்கு சென்ற விஜயிடம், அங்கிருந்தவர்கள் 4 கட்டுகள் போட்டால் சரியாகிவிடும் எனக் கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர், முதலாவதாக கட்டுப்போட்டுக் கொண்டார்.

தவறான சிகிச்சையால் பறிபோன இளைஞரின் கால்!
தவறான சிகிச்சையால் பறிபோன இளைஞரின் கால்!

இதனிடையே இரண்டாம் முறை கட்டுப்போட்ட பிறகு விஜய்-க்கு தொடர்ந்து காலில் ரத்தம் கசிந்ததால், அச்சமடைந்து வைத்தியசாலையின் உரிமையாளர் சிவசாமி வேலுமணியிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதற்கு அவர், அட்மிட் ஆகி சிகிச்சை பெறுமாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஒரு மாதத்திற்கு மேலான போது, விஜயின் எழும்பு முறிவு குணமடையாமல் மேலும் வலியை ஏற்படுத்தி வந்துள்ளது. இதனால், செய்வதறியாத அவரின் குடும்பத்தினர் அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விஜயின் கால் அழுகிய நிலையிலிருப்பதாகக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், உடனே காலை உடம்பிலிருந்து அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியதைத் தொடர்ந்து விஜயின் கால் அகற்றப்பட்டது.

இந்நிலையில், புத்தூர் கட்டு வைத்தியசாலையில் செய்த தவறான சிகிச்சையால் தான், தனது கணவரின் கால் பறிபோனதாகக் கூறி, அவரது மனைவி வேளாங்கண்ணி தனது கணவருடன் இன்று (நவ.30) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்த வைத்தியசாலையின் மீது புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவறான சிகிச்சையால் எனது கணவரின் கால் பறிபோனது. இதனால், தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

எலும்பு முறிவு சிகிச்சையின்போது எடுத்த புகைப்படம்..
எலும்பு முறிவு சிகிச்சையின்போது எடுத்த புகைப்படம்..

அத்துடன், தனது கணவருக்கு தவறான சிகிச்சையளித்த புத்தூர் கட்டு வைத்தியசாலையின் உரிமையாளர் சிவசாமி வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். இதனிடையே ஏற்கனவே, இந்த சிவசாமி வேலுமணி மீது வடபழனி காவல் நிலையத்தில் ஏராளமான புகார்கள் வந்துள்ள நிலையில், இதுகுறித்து மேலும் மற்றொரு புகார் எழுந்துள்ளது.

முன்னதாக, வடபழனி உதவி ஆய்வாளர் திருமலை லஞ்சம் வாங்கும் வீடியோ சமீபத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வீடியோ தொடர்பாக புத்தூர் கட்டு வைத்தியசாலை உரிமையாளர் சிவசாமி வேலுமணி, காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு, சிறப்பு உதவி ஆய்வாளர் திருமலை உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறப்பு உதவி ஆய்வாளர் திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் வடபழனி புத்தூர்கட்டு வைத்தியசாலை மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் போலீசார், தமிழ்நாடு மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தகுந்த விசாரணை செய்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதே சமயம், இதுபோன்ற தவறான சிகிச்சைகளால் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க அரசு அந்த வைத்தியசாலையில் அளிக்கப்படும் சிகிச்சைகளின் தரத்தை உரிய முறையில் ஆய்வு செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: 6 மாநிலம் 6 கல்யாணம்..? சோட்டு குமாரின் சில்மிஷம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.