ETV Bharat / state

கோவையில் புஷ்பா பட பாணியில் சுமார் 1 டன் சந்தனக்கட்டைகள் கடத்தல் - அதிரடியாக விரட்டிப்பிடித்த போலீஸ்!

author img

By

Published : Aug 1, 2023, 6:30 PM IST

கோவையில் புஷ்பா பட பாணியில் லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தி வரப்பட்ட 1,051 கிலோ சந்தனக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

sandalwoods
சந்தனக்கட்டைகள்

கோவையில் புஷ்பா பட பாணியில் சுமார் 1 டன் சந்தனக்கட்டைகள் கடத்தல் - அதிரடியாக விரட்டிப்பிடித்த போலீஸ்!

கோவை: கோவை வெள்ளலூர் பிரிவில், சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாநகர காவல் துறையினர் இன்று(ஆகஸ்ட் 1) அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கேரளாவில் இருந்து வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட சரக்கு லாரி நிற்காமல் சென்றது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியைப் பின் தொடர்ந்து சென்றனர். சேலம் ஆத்தூர் அருகே கர்நாடக எண் கொண்ட வாகனத்தை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் ரகசிய அறை அமைத்து, அதில் சந்தன மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வாகனத்தை ஓட்டி வந்த மனோஜ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து சென்னை வழியாக ஆந்திராவிற்கு சந்தனக் கட்டைகள் கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடத்தப்பட்ட சந்தனக் கட்டைகளை லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார், அதை கோவை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இவற்றை கோவை மண்டல வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இதுதொடர்பாக காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அதிகாரிகள், கேரளாவில் இருந்து லாரி மூலம் சந்தன மரம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டதாகவும், நிற்காமல் சென்ற வாகனத்தை சேலம் வரை பின் தொடர்ந்து சென்று பறிமுதல் செய்ததாகவும் தெரிவித்தனர். மொத்தம் 57 மூட்டைகளில் 1,051 கிலோ அளவிலான சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சந்தனக் கட்டைகள் சத்தியமங்கலத்தில் உள்ள வனத்துறை குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும், அங்கு சந்தனக் கட்டைகளின் மதிப்பு குறித்து அளவீடு செய்யப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தொடர் விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும், இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட சந்தனக் கட்டைகளை வனத்துறையிடம் ஒப்படைத்த நிலையில், இது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.

இதையும் படிங்க: அவசரத்திற்கு உதவிய நண்பனை கொள்ளை வழக்கில் கோர்த்து விட்ட திருடன்… சென்னையில் சுவாரஸ்ய சம்பவம்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.