ETV Bharat / state

சென்னையில் குடிநீர் வரி காலதாமதமாக செலுத்தும்போது வசூலிக்கும் அபராதம் குறைப்பு!

author img

By

Published : Jun 24, 2023, 3:30 PM IST

cmwssb announces Water tariff late surcharge in Chennai reduced from 1.25% to 1%
சென்னையில் குடிநீர் கட்டண காலதாமத மேல் வரி 1.25% இருந்து 1 சதவீதமாக குறைப்பு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மேல் வரி மாதத்திற்கு 1.25 என்ற சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கடந்த மாதம் மே 13ஆம் தேதி குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு குடிநீர், கழிவுநீர் தொடர்பான பிரச்னைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரிலும், மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் குடிநீர், கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மேல் வரி அதிகமாக இருப்பதாகவும், வரியைக் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதனை பரிசீலனை செய்த சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், ஜூலை 1ஆம் தேதி முதல் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மேல் வரி மாதத்திற்கு 1.25 என்ற சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைப்பு என அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மேல் வரி (Surcharge) மாதத்திற்கு, 1.25 என்ற சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்கப்படும்.

தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மாதத்திற்கு 1.25% என்ற விகிதத்தில் மேல் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நுகர்வோர்களின் நலனைக்கருத்தில் கொண்டு தற்போது வசூலிக்கப்பட்டு வரும் மேல் வரி 1.25% இருந்து ஜூலை 1 முதல் 1% குறைத்திட சென்னை குடிநீர் வாரியம் தீர்மானித்துள்ளது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் (மண்டலம் 1 முதல் 15 வரை) உள்ள நுகர்வோர்கள், நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக் கெடுவிற்குள் குடிநீர், கழிவு நீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி மேல் வரியினை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், நுகர்வோர்கள் சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை, இணையதளம் வாயிலாக www.cmwssb.tn.gov.in என்ற வலைதளத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம். மேலும், பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்களில் வரையோலை, காசோலை மற்றும் ரொக்கமாகவும், தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் காசோலை மற்றும் வரையோலையாகவும் செலுத்தலாம்.

மேலும், UPI, QR குறியீடு மற்றும் PoS போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களைச் செலுத்தலாம். எனவே, நுகர்வோர்கள் சென்னை குடிநீர் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை உரிய காலத்திற்குள் செலுத்தி, வாரியத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.