ETV Bharat / state

கச்சத்தீவு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

author img

By

Published : Jul 20, 2023, 11:36 AM IST

இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் மற்றும் கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

cm stalin
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை அதிபர் இந்தியாவிற்கு விரைவில் சுற்றுப்பயணமாக 2 நாள் டெல்லி வரவுள்ளார். இலங்கை அதிபருடனான பேச்சுவார்த்தையின் போது, இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும், மத்திய அரசினால் தமிழ்நாடு அரசின் அனுமதியைப் பெறாமல் அளிக்கப்பட்ட கச்சத்தீவை மீட்கவும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய இலங்கை அதிபரை வலியுறுத்திட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “கச்சத்தீவு, வரலாற்று ரீதியாக இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருவதையும், இந்தத் தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு ஒப்பந்தம் மூலம் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்திருப்பது, தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளது.

இந்த நிலையில், அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, அதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு அடுத்த நாளான 29.6.1974 அன்று அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் தன்னிச்சையான நடவடிக்கையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தார்.

மேலும், 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், இலங்கை அரசுடன் மத்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தை கண்டித்தும், அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் கச்சத்தீவை மீட்டுத் தருமாறு 22.9.2006 அன்று அப்போதைய பிரதமருக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி மீண்டும் கடிதம் எழுதி இருந்தார்.

ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ‘கச்சத்தீவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல், நமது கடலோர சமூகங்களுக்கு கணிசமான பொருளாதார இழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது" என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தெரிவித்ததாகவும், 1974 ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தமும், 1976 மார்ச் 23ஆம் தேதியிட்ட ஒப்பந்தமும், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பது தொடர்பான தகவல் பரிமாற்றங்களும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானவை என்றும், செல்லாதவை என்றும் அறிவிக்கக் கோரி 2013ஆம் ஆண்டு அப்போதைய எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முதலமைச்சராக நான் பொறுப்பேற்றதற்கு பிறகு, 2022ஆம் ஆண்டு பிரதமர் முதன் முதலில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தபோது கச்சத்தீவை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்ததுடன், பாரம்பரிய மீன்பிடி பகுதிகளுக்குத் தமிழ்நாட்டு மீனவர்கள் எளிதில் செல்ல முடியாத சூழல் உள்ளதாகவும், அத்துமீறி நுழைவதாக இலங்கை கடற்படையினர் குற்றம்சாட்டி கைது செய்து துன்புறுத்தும் சூழல் உள்ளதாகவும், பாக் வளைகுடாவின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டெடுப்பது தமிழ்நாடு அரசின் முதன்மையான கோரிக்கைகளில் ஒன்றாகும்.

கச்சத்தீவை மீட்டெடுக்கும் வகையில், மத்திய அரசு இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கிட வேண்டும். பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீண்டும் நிலைநாட்டிடவும், மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கிடும் வகையிலும், கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதுவரை அப்பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையையாவது மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும்: இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. நமது மீனவர்கள் இலங்கை சிறைகளில் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது, மாநிலத்தின் கடலோர கிராமங்களில் உள்ள மீனவ மக்களிடையே ஆழ்ந்த கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், மத்திய அரசு தூதரக நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.

2020ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய 48 தாக்குதல் சம்பவங்களில், 619 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 83 மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்துள்ளது. இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களும் வருவாய் இழப்பினால் பாதிக்கப்பட்டதாகவும், மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் 604 மீனவர்களையும், 16 படகுகளையும் இலங்கை அரசு விடுவித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் மட்டும் 74 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகவும், அவர்களில் 59 பேர் விடுவிக்கப்பட்டு தமிழ்நாடு திரும்பியுள்ள நிலையில், 2020ஆம் ஆண்டு முதல் 67 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளது. சமீபத்தில் ஜூலை 9, 2023 அன்று 15 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதே கால கட்டத்தில் 38 வெவ்வேறு சம்பவங்களில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினராலும், இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களாலும் தாக்கப்பட்டுள்ளதாகவும், இது போன்ற சம்பவங்களில் ஐஸ் பெட்டிகள், மீன்பிடி வலை, ஜிபிஎஸ் கருவிகள், மீன்பிடி உபகரணங்கள், பேட்டரி மற்றும் இன்ஜின் போன்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. எனவே, இந்த விவகாரத்தை வருகை தரும் இலங்கை அதிபரிடம் எடுத்துச் சென்று, சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை நாட்டுடைமையாக்கும் சட்டத்தை திரும்பப் பெற தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் குறித்த பிரச்னைகள்: 2018ஆம் ஆண்டுக்கு முன்னர், இரு தரப்பிலும் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த மீன்பிடிப் படகுகள் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிக்கப்பட்டன . இலங்கை அரசு வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளை நாட்டுடைமையாக்கும் வகையில், கடந்த 2018ஆம் ஆண்டு, தனது மீன்வள சட்டத்தில் திருத்தம் செய்த காரணத்தினால், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் வசம் நல்ல நிலையில் உள்ள நமது மீனவர்களுக்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகளை மீட்டு, தமிழ்நாட்டிற்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பல மீனவர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை பயன்படுத்தி, தங்கள் வணிகத்திற்கு முக்கியமானதும், தங்கள் குடும்பங்களின் முதன்மை வருமான ஆதாரமாகவும் விளங்கும் மீன்பிடிப் படகுகளை வாங்குவதற்கும், பராமரிப்பதற்கும் முதலீடு செய்துள்ளனர். முறையான இழப்பீடு அல்லது மாற்று ஏற்பாடுகள் இல்லாமல், இந்தப் படகுகள் இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்படுவதால், மீனவர்களுக்கு கடுமையான வாழ்வாதார இழப்பு ஏற்படுவதுடன், நிதி நெருக்கடிக்கும் தள்ளப்படுவதாகக் குறிப்பிட்டு, இலங்கை அரசு உரிய சட்டத் திருத்தங்களைச் செய்து, சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளை நாட்டுடைமையாக்குவதைத் திரும்பப் பெற வேண்டும்.

கூட்டுப் பணிக்குழு: மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில், இரு நாட்டு அதிகாரிகளையும் உள்ளடக்கிய மறுசீரமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழு (Joint Working Group) 2016ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதுவரை, ஐந்து சுற்று கூட்டு செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடைசியாக மார்ச் 2022இல் இது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இருப்பினும், இந்தப் பிரச்னைக்கு இதுநாள்வரை ஒரு சுமூகமான தீர்வு ஏற்படவில்லை. உரிய காலத்தில் கூட்டங்கள் நடத்தி ஆலோசனைகள் மேற்கொள்வதன் மூலம், மீனவர்களிடையே நம்பிக்கையை உருவாக்கவும், பயனுள்ள தகவல் தொடர்புகளை எளிதாக்கவும் மற்றும் சுமூகமான மீன்பிடி நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் இயலும்.

இலங்கையில் தமிழர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்தல்: 1956ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசும், எங்களது கட்சியும் உறுதியாக உள்ளது. மேலும், இலங்கையில் உள்ள தமிழர்களின் சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் இலங்கையின் சமமான குடிமக்களாக, கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டியது அவசியமாகும்.

இந்த நோக்கத்திற்காக, இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஆக்கப்பூர்வமான, உறுதியான தீர்வை எட்டுவதற்கு இலங்கை அதிபரை பிரதமர் வலியுறுத்திட வேண்டும். இந்த விவகாரங்களில் பிரதமர் தலையீடும், ஆதரவும், நமது மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வரும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உதவிடும். இதன் மூலம் நமது மீனவர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், இலங்கையுடனான நமது வரலாற்று சிறப்புமிக்க இருதரப்பு உறவுகளை மேம்படுத்திடவும் இயலும்” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:நரிக்குறவர் காலனிக்கு தெருவிளக்கு வசதி - மாநகராட்சி ஆணையாளர், மேயருக்கு பாசி மணிமாலை அணிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.