ETV Bharat / state

'பேரன் பேத்தியைக் கூட பார்க்க நேரமில்லை' - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Mar 5, 2022, 3:28 PM IST

Updated : Mar 5, 2022, 3:37 PM IST

தனியார் பள்ளி பொன்விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்
தனியார் பள்ளி பொன்விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்

கடும் பணிச்சுமை காரணமாக பேரன், பேத்திகளை கூட பார்க்க நேரமில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: அடையாறில் உள்ள தனியார் பள்ளியின் 50ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மார்ச் 5) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "கல்வி என்பது மனிதச் சமுதாயத்தின் அடிப்படைகளில் ஒன்றாக விளங்கிக்கொண்டிருக்கிறது. தரமான கல்விதான் ஒரு மனிதனை அறிவுள்ளவனாக நல்வழிப்படுத்தி, அவனுடைய உயர்வுக்கு உறுதுணையாக இருக்கும்.

என்னுடைய பேரன், பேத்தியும் இதே பள்ளியில்தான் படிக்கிறார்கள். நான் இருக்கக்கூடிய அரசியல் சூழலில், அவர்களை அடிக்கடி பார்க்க முடியாது. இதுமாதிரி பள்ளிக்கூட நிகழ்ச்சிக்கு வந்தால்தான் பார்க்க முடிகிறது. அதற்காகவே அடிக்கடி பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு வந்தது.

தனியார் பள்ளி பொன்விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்

என்னுடைய பேரப் பிள்ளைகள் மட்டுமல்ல, இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மாணவர்களுமே என்னுடைய செல்வங்கள்தான். என்னுடைய அன்பிற்கும், பாசத்திற்குரியவர்கள்தான்.

'நான் முதல்வன்' திட்டம்

அதனால்தான், மாணவர்களுக்கு தரமான கல்வியை இன்றைக்கு இருக்கக்கூடிய தமிழ்நாடு அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு திட்டங்களை அதற்காக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அண்மையிலே கூட, 'நான் முதல்வன்' என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தேன்.

கோடிங், ரோபாடிக்ஸ் (Coding, Robotics) போன்ற எதிர்காலத்திற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி, திறன்மிகு மாணவர்களாக அவர்களை உருவாக்கக்கூடிய திட்டம்தான் அந்தத் திட்டம். எனக்கு மிகவும் பிடித்த, நெருக்கமான திட்டம் என்று அதைச் சொல்லலாம்.

மாணவர்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்று நினைக்கின்றவன் நான். அதுதான் திராவிடச் சிந்தனை. அந்தச் சிந்தனையோடு செயல்படுவதால்தான் நமது அரசை 'திராவிட மாடல்' அரசு என்று நான் சொல்லிக் கொண்டு வருகிறேன்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி அறங்காவலர், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

Last Updated :Mar 5, 2022, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.